"இரட்டை இலை"யை முடக்க அதிரடி காட்டும் ஓ.பி.எஸ் அணி.. சசி நீக்கத்தின் பின்னணி !
இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியை அதிகாரப்பூர்வமாக தங்களது கட்டுப்பாட்டில் எடுக்க ஓ.பி.எஸ் அணி தீவிரமாக களப்பணியாற்றி வருவது தெளிவாகிறது.
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி பிறகு அதை தங்கள் பக்கம் கொண்டுவந்து அதிமுகவை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் டீம் படு வேகமாக செயல்பட்டு வருகிறது.
ஓ.பி.எஸ் குழுவிலுள்ள அதிமுக ராஜ்யசபா எம்.பியான மைத்ரேயன் தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் டெல்லியில் நேற்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அதிமுக பொதுக்குழு விதிமுறைகளுக்கு மாறாக சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவரது பதவி நியமனம் செல்லாது என அறிவிக்க கோரிக்கைவிடுக்கப்பட்டது.
சசிகலா அதிமுக பொதுச்செயலர் என்ற வகையில் பிறப்பித்த உத்தரவுகளும் செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்பதும் கோரிக்கை. மேலும் சசிகலா கோஷ்டி பயன்படுத்திவிட கூடாது என்பதால், இரட்டை இலை சின்னத்தையும் முடக்க வேண்டும் என்று கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்தான் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன், அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் சசிகலாவை இன்று நீக்குவதாக உத்தரவு வெளியிட்டுள்ளார். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சசிகலா செயல்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டிடிவி தினகரன் மற்றும் வெங்கடேஷ் ஆகிய சசிகலா உறவினர்களை கட்சியில் இணைத்துக் கொண்டதோடு, தினகரனை, கட்சி துணை பொதுச்செயலராக சசிகலா நியமித்ததும் செல்லாது என்கிறது மதுசூதனன் உத்தரவு. அவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், அதிமுக கட்சியின் அவை தலைவர் தான்தான் என்பதை பறை சாற்றுகிறார் மதுசூதனன். அதிமுக பொதுச்செயலர் பதவி காலியாகவே உள்ளதாகவும், ஒன்றரை கோடி தொண்டர்களிடமும் வாக்கெடுப்பை நடத்தி புதிய பொதுச்செயலர் தேர்ந்தெடுக்கப்படுவார் என ஓ.பன்னீர்செல்வம் நேற்று கூறியிருந்தார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியை அதிகாரப்பூர்வமாக தங்களது கட்டுப்பாட்டில் எடுக்க ஓ.பி.எஸ் அணி தீவிரமாக களப்பணியாற்றி வருவது தெளிவாகிறது.