பிளாஷ்பேக்... பன்னீர் செல்வத்தின் பதவி ஏற்பு விழாவின் "கண்ணீர்க் காட்சிகள்"!
சென்னை: முதல்வர் பதவியில் இருந்தார் என்பதை விட அந்தப் பதவியில் சற்றும் ஒட்டாத முதல்வராக இருந்தார் என்றுதான் ஓ.பன்னீர் செல்வத்தைச் சொல்ல வேண்டும்.
அத்தனை அடக்கமாக, அமைதியாக, ஆர்ப்பாட்டமே இல்லாமல், ஜெயலலிதாவின் மனம் சிறிதளவு கூட கோணாமல், அவர் எப்படி எதிர்பார்த்தாரோ அதை விட பல மடங்கு அதிகமாகவே அமைதியான முதல்வராக வலம் வந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
இப்படித்தான் தனது வாரிசு இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா எதிர்பார்த்தது போலவே செயல்பட்ட பன்னீர் செல்வத்தைப் பார்த்து பொறாமைப்படாத அதிமுகவினரே இருக்க முடியாது. நிச்சயம் பொன்னையன், ஜெயக்குமார் போன்றோர் இவரைப் போல இருந்திருப்பார்கள் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இதனால்தான் பன்னீர் செல்வத்தை முதல்வராக தேர்ந்தெடுத்தார் ஜெயலலிதா.
பதவியேற்பு விழா சுவாரஸ்யங்கள்
ஓ.பன்னீர் செல்வத்தின் பதவி ஏற்பு விழாவை சொல்லியே ஆக வேண்டும். பல வித்தியாசமான காட்சிகளைக் கொண்டதாக அந்த வைபவம் இருந்தது. 2001ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்.
ஜீரணிக்க முடியாத அதிமுக
ஜெயலலிதா முதல்வர் இல்லை, இனி பன்னீர்தான் முதல்வர் என்பதை அப்போது அதிமுகவினரால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை அந்த நிகழ்ச்சி காட்டியது.
ரங்கராஜன்
அப்போது தமிழக ஆளுநர் பதவியை (பாத்திமா பீவி ராஜினாமா செய்து விட்டுப் போய் விட்டதால்) சி.ரங்கராஜன் கவனித்து வந்தார். அவர் அப்போது ஆந்திர ஆளுநராக இருந்தார். அவர்தான் பன்னீருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
"ப.மு. ப.பி" மறக்காமல் காலில் விழுந்த பன்னீர்
முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள அழைக்கப்பட்டபோதும், பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கால்களில் விழுந்து ஆசி பெற்றுக் கொள்ள ஓ.பன்னீர் செல்வம் தவறவில்லை.
ஆளுநருக்கு அருகே உட்காரவில்லை
முதல்வராகப் பதவியேற்ற பிறகு ஆளுநருக்கு அருகே போடப்பட்டிருந்த இருக்கையில் ஓ.பன்னீர் செல்வம் அமரவில்லை. மாறாக, பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவுக்கு அருகே இருக்கையைப் போடச் சொல்லி அங்கேயே அமர்ந்து கொண்டார்.
இறுகிய முகத்துடன் சீனியர்கள்
ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பல மூத்த அமைச்சர்கள் இருக்கமான முகத்துடன் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தங்களில் ஒருவரை எடுப்பதை விட்டு விட்டு அனுபவமே இல்லாத ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக தேர்வு செய்தது அவர்களுக்கு அதிருப்தியளித்திருந்தது.
அழுது புலம்பிய பெண் அமைச்சர்கள்
அப்போதைய பெண் அமைச்சர்களான ஆர்.சரோஜா, பா.வளர்மதி, வளர்மதி ஜெபராஜ் ஆகிய 3 பேரும் கண்ணீரும் கம்பலையுமாக காணப்பட்டனர்.
நீங்க இல்லாம எப்படிம்மா...!
இவர்களில் சரோஜா வாய் விட்டு அழுதவாறு காணப்பட்டார். நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி இருக்க முடியும் என்று மூன்று பேரும் ஜெயலலிதாவிடம் கேட்டு அழுதனர். அவர்களை ஜெயலலிதா கையசைத்து சமாதானப்படுத்தினார்.
யாருமே வாழ்த்தவில்லை
முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றாலும் கூட அவருக்கு, சக அமைச்சர்கள் வணக்கம் கூறியோ, வாழ்த்துக் கூறியோ எதுவும் பேசவில்லை. அவர்கள் பாட்டுக்கு இருந்தார்கள்.
சோகம் + பீதி முகத்துடன் பன்னீர்
பன்னீர்செல்வமும் அதை எதிர்பார்த்தது போல தெரியவில்லை. பதவிப்பிரமாண நிகழ்ச்சி முடியும் வரையிலும் சோகமான முகத்துடன் காணப்பட்டார் ஓ.பன்னீர் செல்வம். கூடவே அவரது முகத்தில் இனம் புரியாத பீதியையும் மற்றவர்களால் உணர முடிந்தது.
"மேயர்" ஸ்டாலின் வாழ்த்து
முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வத்திற்கு அப்போதைய சென்னை மாநகராட்சி மேயர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார். அதில், தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள தங்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். தாங்கள் முதல்வராகப் பதவியேற்றபோது மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்ததால் பதவியேற்பு விழாவுக்கு வரஇயலவில்லை என்று கூறியிருந்தார் ஸ்டாலின்.
முதல் கையெழுத்து
புதிய முதல்வரான ஓபன்னீர் செல்வம், பத்திரப் பதிவுத் துறையில் 1500 ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பதற்கான கோப்பில் கையெழுத்துப் போட்டு அவர் தனது பணிகளைத் தொடங்கினார். முதல் நாளில் 2 மணி நேரம் வேலை பார்த்தார் பன்னீர்.
இதோ.. 13 ஆண்டுகளாகி விட்டது பன்னீர் முதல்வர் பதவியேற்று....!