உயிருடன் மீண்ட ஒடிசா வாலிபர் இறந்ததாக கருதி வேறு பிணத்தை எடுத்துச் சென்றதால் குழப்பம்!
சென்னை: சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்தில் உயிருடன் மீட்கப்ப்ட விகாஷ் என்பவர் இறந்து விட்டதாக கருதி, வேறு ஒருவரின் பிணத்தை உறவினர்கள் எடுத்துச் சென்றதால் பெரும் குழப்பமாகி விட்டது.
விகாஷ் என்று அழைக்கப்படும் பிரகாஷ் குமார் ராவ் ஒடிசாவைச் சேர்ந்தவர். இவர் மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பில் கட்டுமானத் தொழிலாளராக வேலை பார்த்து வந்தார். விபத்தில் இவரும் சிக்கிக் கொண்டார். கி்ட்டத்தட்ட 72 மணி நேரம் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்த விகாஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். மீட்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விகாஷ் விபத்தில் சிக்கிய தகவல் கிடைத்ததும் அவரது உறவினர்கள் ஒடிசாவிலிருந்து வந்தனர். அவர்களுக்கு விகாஷ் மீட்கப்பட்ட விவரம் தெரியவில்லை. மேலும் விகாஷ் என்பது செல்லப் பெயர் என்பதால் அந்தப் பெயரைச் சொல்லி அவர்கள் மருத்துவமனையில் விசாரித்துள்ளனர். அங்கோ இறந்தவர்கள், படுகாயமடைந்தவர்கள் பட்டியலில் பிரகாஷ் குமார் ராவ் என்ற பெயரில்தான் குறிப்பி்ட்டிருந்தனர். அதை உறவினர்கள் கவனிக்கவில்லை. விகாஷ், விகாஷ் என்றுதான் அவர்கள் கேட்டுள்ளனர்.
எந்தத் தகவலும் கிடைக்காததால், விகாஷ் இறந்திருக்கலாம் என்று கருதி ராயப்பேட்டை மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களைப் பார்த்தனர். அதில் ஒருவருடைய உடல் விகாஷ் போல இருந்ததால் அதை விகாஷ் என்று அடையாளம் காட்டி கதறி அழுதனர்.
பின்னர் அந்தப் பிணத்தைப் பெற்றுக் கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் ஒடிசாவுக்கும் கிளம்பிப் போய் விட்டனர். இந்த நிலையில்தான் பிரகாஷ் குமார் ராவ்தான் விகாஷ் என்று சென்னையில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து ஒடிசாவுக்குக் கிளம்பிப் போய்க் கொண்டிருந்த வேனை போன் மூலம் தகவல் சொல்லி தடுத்து நிறுத்தி மீண்டும் சென்னைக்கு வர வைத்தனர்.
கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் தூரத்திற்கு வேன் போயிருந்தது. ஆனால் விகாஷ் உயிருடன் இருக்கும் தகவல் உறவினர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. இதையடுத்து கொண்டு சென்ற பிணத்துடன் அவர்கள் மீண்டும் சென்னை திரும்பினர். பிணத்தை ஒப்படைத்து விட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அவர்கள் விரைந்து சென்று விகாஷைச் சந்தித்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.












Click it and Unblock the Notifications