எத்தலீன் வாயுவால் பழுக்க வைக்கப்பட்ட 10,500 கிலோ மாம்பழங்கள் கோயம்பேட்டில் பறிமுதல்
செயற்கை மாம்பழங்கள் 10,500 பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள 10,500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாம்பழங்களை பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்யப்பட்டு, பின்பு அதில், கார்பைட், எத்தலீன் போன்றவற்றை பயன்படுத்தி செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். அதாவது இயற்கை முறையில் மாம்பழம் 10 நாட்களில் பழுக்கிறதென்றால் எத்தலீன் வாயுவினால் பழுக்க வைத்தால் 5 நாட்களில் பழுத்துவிடுமாம்.
சிலர் கார்பைடு கற்கள் மூலமும் பழங்களை பழுக்க வைத்து விற்கிறார்கள். எப்படி பார்த்தாலும் அவை எல்லாமே இயற்கைக்கு முரணானதே. இந்த மாம்பழங்களில் எந்த சத்துக்களும் இருக்காது. உடலுக்கும் கெடுதல் வேறு. தித்திப்பாக வேண்டுமானால் அதிகமாக இருக்கும். இதனை சாப்பிட்டால் புற்றுநோய் கூட வர வாய்ப்புண்டு. அதனால் இதுபோன்று கலப்படம் செய்து விற்கப்படும் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தேடி கண்டறிந்து அழித்தும் தடுத்தும் வருகிறார்கள்.
அதுபோல கலப்படம் செய்த பழங்கள், கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனால் 22 பேர் கொண்ட குழு ஒன்று மார்கெட்டில் திடீர் சோதனையில் இன்று ஈடுபட்டது. அப்போது ரசாயனம் கலந்த 10.2 டன் எடை கொண்ட மாம்பழங்களை அதிகரிகள் பறிமுதல் செய்தனர். அதாவது 10,500 கிலோ மாம்பழங்கள் என சொல்லப்படுகின்றன. அவற்றின் மதிப்பு ஏழரை லட்சம் என போலீசார் கூறுகின்றனர்.
மாம்பழங்களை பழுக்க வைக்க பயன்படும் 5 லிட்டர் எத்தலீனும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையெல்லாம் மக்கள் தலையில் கட்ட பார்த்த அக்கடை உரிமையாளர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். அத்துடன், இனியும் இதுபோல ரசாயனம் கலந்து பழங்களை விற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்றும் எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர்.