அதிகாரிகளின் மெத்தனத்தால்தான் சோமனூர் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தது!
கோவை சோமனூர் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று கூறப்படுகிறது.
கோவை: கோவை சோமனூர் பேருந்து நிலையத்தில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கோவையில் சோமனூர் பேருந்து நிலையத்தில் இன்று பஸ்ஸுக்காக காத்து கிடந்தனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் சிலரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எப்போது கட்டப்பட்டது?
இந்த பேருந்து நிலையமானது 11 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதை மாவட்ட நிர்வாகம் பராமரிப்பதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கன மழை காரணமாக பேருந்து நிலைய மேற்கூரையில் ஆங்காங்கே பழுது ஏற்பட்டு மழைநீர் கசிந்து வந்தது.
பலவீனமடைந்து விட்டது
சோமனூர் பேருந்து நிலையம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அதை பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மக்கள் புகார் கூறுகின்றனர்.
Recommended Video
விபத்தை தவிர்த்திருக்கலாம்
இந்த பேருந்து நிலையம் குறித்து மக்கள் புகார் தெரிவித்தவுடன் மாவட்ட நிர்வாகத்தினர் தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. எல்லா சூழல்களிலும் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதிலேயே குறியாக உள்ளனர் அரசு அதிகாரிகள் என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இனியாவது நடவடிக்கை?
ஒரு விபத்து நடைபெறும் வரை மக்களின் கோரிக்கைகளை அரசு நிர்வாகத்தினர் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் விபத்து நடைபெற்றவுடன் முண்டியடித்து கொண்டு நடவடிக்கை எடுப்பதில் என்ன பயன்?. இனியாவது இதுபோன்ற பொது இடங்கள் சீரமைக்கப்படுமா?. அவ்வாறு சீரமைக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்கின்றனர் பொதுமக்கள்.