தொடரும் பண வேட்டை: சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் ரூ. 4.72 கோடி சிக்கியது- விடிய விடிய விசாரணை
சென்னை: கரூரில் அதிமுக பிரமுகருக்கு நெருக்கமான அன்புநாதனின் வீடு, குடோனில் ரூ.5 கோடி பணம் சிக்கிய இரண்டாவது நாளில் மேலும் ஒரு அதிரடி சோதனை நடந்துள்ளது. சென்னையில் அதிமுக பிரமுகர் விஜய் கிருஷ்ணசாமி என்பவரது வீட்டில் நேற்று நடந்த திடீர் சோதனையில் மேலும் 4.72 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணத்தை பதுக்கி வைத்த விஜய் கிருஷ்ணசாமி, அவரது தந்தை மற்றும் தம்பியிடம் தேர்தல் அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வருமான வரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய பறக்குபடை கூட்டாக பல மணி நேரம் துருவித்துருவி சோதனை செய்தது. அடுத்தடுத்து அமைச்சர்களின் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடப்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்திற்கு வரும் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்று மார்ச் 4ம் தேதி அறிவிப்பு வெளியானது. அது முதலே நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக மாவட்டந்தோறும் அதிகாரிகள் தலைமையில் மூன்று பறக்கும்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடந்து வருகிறது.
இதுதவிர வெளிமாநில தேர்தல் பார்வையாளர்களும் தமிழக தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் வருமானவரித்துறையினர், தேர்தல் அதிகாரிகள் நடத்திய அதிரடி ரெய்டில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் உச்சகட்டமாக கரூரில் கடந்த 22ம் தேதி பறக்கும் படையினர் நடத்திய ரெய்டில் அன்புநாதன் என்பவரின் குடோனில் இருந்து ரூ.5 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.
நாட்டிலேயே தேர்தல் சமயத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் இதுதான் அதிகம். மேலும் இதுவரை 15 நாளில் ரூ.500 கோடி வரை பணம் பரிமாற்றம் நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவினரின் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மதிமுக பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சென்னையில் அதிரடி ரெய்டு
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் 16 அடுக்குமாடி கொண்ட தனியார் அபார்ட்மென்டில் விஜய் கிருஷ்ணசாமி என்பவரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 4.72 கோரூபாயை கைப்பற்றியுள்ளனர். இவர், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகனாவார்.

அமைச்சரின் ஆதரவாளர்
விஜயகுமார், அதிமுகவில் தஞ்சாவூர் மாவட்ட எம்ஜிஆர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார். அமைச்சர் வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இவரது மகன் விஜய் கிருஷ்ணசாமி வசிக்கும் எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்
இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பல கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதிரடி சோதனை
இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவின்பேரில், விஜய் கிருஷ்ணசாமி வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். மாலை 3.30 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 10 மணி வரை நீடித்தது. முதலில் லட்சக்கணக்கில் தான் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் சோதனை செய்ததில் உள்ளே கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அதிகாரிகள் விசாரணை
விஜய்கிருஷ்ணசாமியிடம், பதுக்கப்பட்டிருந்த பணம் குறித்து அதிகாரிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். தேர்தல் நேரத்தில் இவ்வளவு பணத்தை மொத்தமாக ஏன் பதுக்கி வைத்துள்ளீர்கள் என்றும் பணத்துக்கான ஆவணங்கள் குறித்தும் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, விஜய் கிருஷ்ணசாமி இந்த பணம் தனது உறவினர் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரிவித்தார். இருப்பினும் அதற்கான ஆவணங்கள் எதையும் அவர் காட்டவில்லை. இதையடுத்து, அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம்
விஜய்கிருஷ்ணசாமி சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஆவாரம்பட்டி. இவரது தம்பி சிவக்குமார் காவல்துறை ஆய்வாளராக இருந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து பல இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இருவர் மீதும் சில வழக்குகள் கூட நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது. இந்த பிரச்னை காரணமாக சிவக்குமார் இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

விடிய விடிய விசாரணை
விஜய் கிருஷ்ணசாமி, தேனாம்பேட்டையில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில், பங்குதாரராக உள்ளார். இவரது தந்தை விஜயகுமார், தந்தை எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆவார். அதிமுக எம்எல்ஏ ஒருவரை பார்க்க விழுப்புரத்திற்கு வந்த அவரை வருமான வரித்துறையினர் சென்னை வரவழைத்து திருவிக நகரில் இரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவரது மகன் விஜய் கிருஷ்ணசாமியிடமும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தம்பியும் தப்பவில்லை
இந்நிலையில் எழும்பூரை போன்று திருவிக நகரிலும் பல கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எழும்பூரில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர். விஜய் கிருஷ்ணசாமியின தம்பி அனந்த் கிருஷ்ணசாமியிடமும் அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர். ஏராளமான ஆவணங்கள் மற்றும் மேலும் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications