தீபாவளி ஸ்பெஷல்: ஆம்னி பஸ் கட்டணத்தை 10% உயர்த்த உரிமையாளர்கள் திட்டம்
சென்னை: தீபாவளிப் பண்டிகையொட்டி ஆம்னி பஸ்களின் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தாண்டு தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 22ம் தேதி புதன்கிழமை கொண்டாடப் பட உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களில் பலர் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை விடுப்பு எடுத்து, அக்டோபர் 17-ந் தேதியே(வெள்ளிக்கிழமை) சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று, தீபாவளி முடிந்ததும் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, தீபாவளிப் பண்டிகையையொட்டி ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து விட, சொந்த ஊர் சென்று பண்டிகையைக் கொண்டாட விரும்பும் மக்களின் அடுத்த இலக்கு பஸ் தான். ஏற்கனவே, பஸ் கட்டணங்கள் கண்டபடி எகிறியிருக்க தீபாவளியை ஒட்டி அதை இன்னும் 10 சதவீதம் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறார்களாம் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்.
அரசு பஸ்கள்...
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பஸ்களில் 50 சதவீதம் இடங்கள் காலியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில தினங்களில் அரசு பஸ்களில் உள்ள அனைத்து இடங்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பதிவு முடிந்தது...
இதனால், அக்டோபர் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களில் அனைத்து இடங்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
சிறப்பு ரயில்...
ஆண்டு தோறும் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன் தெற்கு ரயில்வே தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். எனவே, சிறப்பு ரயிலை எதிர்பார்த்து பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பஸ் தான் கரெக்ட்...
ஆனால், முன்கூட்டியே விடுமுறையை நிர்ணயிக்க இயலாத நிலையில் பணியில் இருப்பவர்கள் தங்களது திடீர் பயணத்திற்கு பஸ் பயணத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு தினசரி சுமார் 200 முதல் 300 தமிழ்நாடு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சிறப்பு பஸ்கள்...
சிறப்பு ரயில்களைப் போலவே தமிழக அரசு உத்தரவின் பேரில் கடைசி நேரத்தில் சிறப்பு பஸ்களும் இயக்கப் படுவது வழக்கம். கடந்த ஆண்டு தீபாவளி தினத்திற்கு சில தினங்களுக்கு முன், சென்னையில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல 4,300 சிறப்பு பஸ்களும், இதே போன்று தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு 4,050 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 8,350 சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்கியது. இதே போன்று இந்த ஆண்டு தீபாவளிக்கும் சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு விரைவு பஸ் கழகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆம்னி பஸ் முன்பதிவு...
இந்நிலையில், ஆம்னி பஸ்களில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை. தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ஆம்னி பஸ்களில் முன்பதிவு மேற்கொள்ளப்படும். ஆம்னி பஸ்களில் தென்மாவட்டங்களுக்கு செல்ல சாதாரண பஸ்களில் சுமார் 750 ரூபாயும், ஏ.சி. பஸ்களில் 900 ரூபாயும், வால்வோ பஸ்களில் 1,300 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
10% கட்டண உயர்வு...
தற்போது, டீசல் விலை அதிகரித்து இருப்பதாலும், டோல்கேட் கட்டணம் 30 சதவீதம் அதிகரித்து உள்ளதாலும், இன்சூரன்ஸ் தொகை 30 சதவீதம் அதிகரித்து உள்ளதாலும், மத்திய அரசின் சேவை வரி 5 சதவீதம் அதிகரித்து உள்ளதாலும், பல ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பயணிகளுக்கான சேவைகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருவதாகவும், இதனால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, 10 சதவீதம் கட்டண உயர்வுக்கான திட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.