கலாம் பெயரைக் கெடுக்காத எந்த செயலையும் ஏற்கலாம்... "ஒன்இந்தியா - தமிழ்" வாசகர்கள் கருத்து!
சென்னை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமை இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் உள்ளவர்களும் இன்று அனுசரித்து வருகின்றனர்.
கலாம் நம்மை விட்டு மறைந்து இன்றுடன் ஒரு வருடம் முடிந்துள்ளது. இதே நாளில்தான் கடந்த ஆண்டு அவர் ஷில்லாங் நகரில் மாணவர்களிடையே உரையாற்றச் சென்றிருந்தபோது மரணமடைந்தார்.
இந்த நிலையில் அப்துல் கலாமை எப்படி நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று நமது வாசகர்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள் அளித்த கருத்து குறித்த ஒரு பார்வை...
பிரமாண்ட கல்விக் கூடம் அமைக்கலாம் 16%
அப்துல் கலாம் பெயரில் பிரமாண்டக் கல்விக் கூடம் அமைக்கலாம் என்று வாக்களித்தவர்களில் 16 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இஸ்ரோவுக்கு அவர் பெயர் சூட்டலாம் 13%
இந்திய அறிவியல் ஆய்வுக் கழகமான இஸ்ரோவையும், கலாமையும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்த வகையில் இஸ்ரோவுக்கு அவரது பெயரைச் சூட்டலாம் என்று 13 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர்.
அறிவியல் ஆய்வு கழகம் நிறுவலாம் 11%
அப்துல் கலாம் பெயரில் மிகப் பெரிய அறிவியல் ஆய்வுக் கழகம் அமைக்கலாம் என்பதற்கு 11 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
மிகப் பெரிய நினைவிடம் கட்டலாம் 2%
கலாமுக்கு நினைவிடம் என்ற பெயரில் ஒரு கட்டடத்தைக் கட்டுவதில் பலருக்கும் உடன்பாடு இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த பதிலுக்கு 2 சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்திருந்தனர்.
கலாம் பெயரில் விருது தரலாம் 5%
அப்துல் கலாம் பெயரில் ஒரு உயரிய விருதை ஏற்படுத்தி அந்த விருதினை தரலாம் என்று 5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தேவி போல சிலை அமைக்கலாம் 3%
அப்துல் கலாமுக்கு சிலைகள் என்றாலே பிடிக்காது. அதேபோலத்தான் கலாமை விரும்புபவர்களுக்கும் அவரை சிலையாக்கி முடக்க விருப்பம் இல்லை. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போல வைக்கலாம் என்ற பதிலுக்கு 3 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அவர் பெயரைக் கெடுக்காத எந்த செயலும் நல்லதே! 51%
இதையெல்லாம் விட முக்கியமானது நமது வாசகர்கள் தேர்ந்தெடுத்துள்ள கடைசி ஆப்ஷன்தான். அப்துல் கலாமின் பெயரைக் கெடுக்காமல் இருந்தாலே போதும் என்பதே மக்களின் தீர்ப்பாக உள்ளது. இதற்குக் காரணம், கடந்த ஒரு வருடத்தில் கலாம் நினைவிடம் தொடர்பாக நடந்த குழப்பங்களைப் பார்த்து மக்கள் வெறுத்துப் போய் விட்டதால்தான். கலாம் பெயரைக் கெடுக்காத எந்த செயலும் நல்லதே என்று 51 சதவீதம் பேர் அடித்துக் கூறி விட்டனர்.
அரசுகள் இதைக் கவனத்தில் கொள்ளுமா?