ஆய்வுப் பணிகளைத் தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை... மிரட்டும் ஓஎன்ஜிசி!
சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணிகளை நிறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓஎன்ஜிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னை : எண்ணெய் கிணறு அமைக்கும் ஆய்வுப் பணிகளைத் தடுத்து நிறுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓஎன்ஜிசி தனது அறிக்கை மூலம் கூறியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் விவசாய நிலத்தின் நடுவில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு ஓஎன்ஜிசி புதிய எண்ணெய் கிணறு அமைப்பதற்கான குழாயை பதிப்பதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. கமலாபுரம், எருக்காட்டூர், கொரடாச்சேரி, வெள்ளங்குடி, அடியக்கமங்கலம், களப்பால் போன்ற 100 இடங்கள் எண்ணெய் கிணறு அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளனர்.
இதன் முதற்கட்டமாக நன்னிலத்தை அடுத்த தென்னஞ்சேரி கிராமத்தில் விவசாய நிலத்தின் நடுவில் புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு திருவாரூர் மாவட்டத்தின் 40 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு பணிகளையும் தடுத்து நிறுத்தினர். மேலும் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைக்கும் பணிகளை கண்டித்து நேற்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் கடையடைப்பும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஓஎன்ஜிசி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்ட விதிகளுக்கு உட்பட்டே ஓஎன்ஜிசி பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளைத் தடுப்பது சட்ட விதிகளுக்குப் புறம்பானது.
ஓஎன்ஜிசி பணிகளைத் தடுப்பவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். எண்ணெய்க் குழாய் பணிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று கருதினால் மக்கள் நீதிமன்றத்தை நாடலாம். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து முன் அனுமதி பெற்றே ஆய்வுப் பணிகள் நடைபெறுவதாகவும் ஓஎன்ஜிசி விளக்கம் அளித்துள்ளது.