ஊட்டி மருத்துவமனையில் சிசேரியன் செய்த மேலும் ஒரு பெண் மரணம்.. உறவினர்கள் சாலை மறியல்
உதகை: உதகை அரசு மருத்துவமனையில் சிசேரியன் முறையில் பிரசவம் பார்க்கப்பட்ட பெண்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்களைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மாதம் தர்மபுரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் 22 பேர் பலியான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அது தொடர்பான பரபரப்புகள் அடங்குவதற்குள் உதகை அரசு மருத்துவமனை பிரச்சினையில் சிக்கியுள்ளது.
இங்கு கடந்த 24ம் தேதி முதல் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகளைப் பெற்றெடுத்த இளம் தாய்மார்கள் நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் இருவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் இறந்தனர். மேலும், உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர் சரஸ்வதி மற்றும் ராதிகா என்றா இளம்தாய்மார்கள் இருவர்.
இவர்களில் சிகிச்சை பலனின்றி சரஸ்வதி நேற்று உயிரிழந்த நிலையில், இன்று ராதிகாவும் பரிதாபமாக இறந்தார். ராதிகாவின் மரணத்தால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் சுமார் 200 பேர் கோவை - திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உயிரிழந்த இளம் தாய்மார்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களைக் கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கால், அப்பெண்கள் பலியாகி இருக்கலாம் என உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். எனவே, இது தொடர்பாக மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே உயிரிழந்த பெண்களின் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உதகை அரசு மருத்துவமனையில்அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது அப்பகுதி கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.