தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்தை இயக்குவது ஆபத்தானது: எச்சரிக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்!
தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்தை இயக்குவது ஆபத்தானது என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
சென்னை: தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்தை இயக்குவது ஆபத்தானது என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை கொண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இதுதொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது. தொழிலாளர்களின் உரிமைகளை அரசு நசுக்கக்கூடாது. தொழிலாளர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்திற்கு சுமூக தீர்வு உடனடியாக காண வேண்டும்.
தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்தை இயக்குவது மிகவும் ஆபத்தானது என்பதை அரசு உணர வேண்டும். இவ்வாறு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி தெரிவித்துள்ளார்.