பரபரப்புக்கு மத்தியில் மக்கள் வெள்ளத்தில் திமுக கண்டனக் கூட்டம்.. அனிதாவுக்கு அஞ்சலி
திருச்சியில் நடைபெற்ற நீட் கண்டன பொதுக்கூட்டத்தில் எதிர்கட்சித்தலைவர்களும், பொதுமக்களும் அனிதாவிற்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.
திருச்சி: நீட் தேர்வுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் நடைபெற்று வரும் கண்டன பொதுக்கூட்டத்தில் அனிதாவிற்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதாவை நீட் தேர்வு காவு கொண்டது. மருத்துவ கனவு சிதைந்து போனதால் கடந்த 1ஆம்தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குழுமூர் வந்த மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று கூறினார். அதன்படி நடந்த கூட்டத்தில் மாணவி அனிதாவின் உயிரிழப்புக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தியும் செப்டம்பர் 8ஆம்தேதி அனைத்து கட்சி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் காவல்துறையினரில் தடையை மீறி பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருமாவளவன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனையடுத்து திருச்சியில் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் தற்போது அனுமதி மறுத்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பினை அடுத்து அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடையை மீறி திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாகிருல்லா, நீட் தேர் புதைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுவதாக கூறினார்.
நீட் தேர்வினால் கிராம, ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாக கூறினார். இது சர்வதேச சதி என்றும், இதற்கு பாஜக, பினாமி அரசு ஒத்துப்போவதாக குற்றம் சாட்டினார் ஜவாகிருல்லா. இது கல்வி புரட்சியல்ல. ஏழைகளை காவு வாங்கும் புரட்சி என்றும் குற்றம் சாட்டினார்.