மக்கள் மத்தியில் மதிப்பிழந்தவர்கள் சட்டசபை மான்பு பற்றி பேசலாமா? - ஓ.பிஎஸ்
மக்கள் மத்தியில் மதிப்பிழந்தவர்கள் சட்டசபை மான்பை பற்றி பேசலாமா என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : தமிழக சட்டசபையில் மறைந்த ஜெயலலிதாவின் படம் திறப்பது மக்களுக்கு பெருமையான விஷயம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை திறப்பதற்கான முயற்சிகளை அரசு முன்எடுத்து வருகிறது. ஆனால் திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவரின் புகைப்படத்தை சட்டசபையில் வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சிப் பொருளாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் இதயங்களைவிட்டு மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

இன்னொரு தாய்
புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எங்களுக்கு இறைவன் கொடுத்த இன்னொருதாய் என்று தமிழக மக்கள் எல்லோரும் அன்று மனம் நிறைந்து வாழ்த்தினார்கள். இன்றும் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அம்மா அவர்களுடைய சிந்தனை, செயல் எல்லாமே தமிழர்கள்தான் தாய்மார்கள்தான்.. தமிழ்நாட்டை இந்தியாவின் முதன் மாநிலமாக ஆக்குவதற்காக ஓய்வில்லாமல் உழைத்து உயர்த்திக் காட்டியவர் அம்மா.

மக்கள் விருப்பம்
தமிழ்நாட்டை மீண்டும்-மீண்டும் அம்மா அவர்கள்தான் ஆளவேண்டும். மனநிறைவோடும், மகிழ்வோடும் வாழவேண்டும். தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழவேண்டும் என்று தமிழக மக்கள் எடுத்த முடிவு. அந்த முடிவு தமிழகத்தில் பல கட்சிகளின் கற்பனைகளுக்கு முடிவு கட்டியது. பலரின் முதல்வ பதவி கனவுகளுக்கு முடிவு கட்டியது.

வயிற்றெரிச்சல்
அந்த மனப் புழுக்கம் இன்றும் குறையாத காரணத்தால்தான், மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவப் படம் சட்டமன்றத்தில் திறக்கப்படக் கூடாது என்று கூக்குரல் இடுகிறார்கள். 1967-ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லையே என்ற ஆற்றாமை சிலருக்கு, ஒரு உறுப்பினரைக் கூட சட்டமன்றத்திற்கு அனுப்ப முடியவில்லையே என்ற வயிற்றெரிச்சல் சிலருக்கு, அவர்கள் மட்டும்தான் அம்மா அவர்களின் திருவுருவப் படம் சட்டமன்றத்திலே இடம் பெறக் கூடாது என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் நாகரீகம் இல்லை
தமிழகத்தை வளமாக்கிய புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படம் சட்டமன்றத்தில் திறக்கப்படும் அந்தப் பொன்னாள் எப்பொழுது வரும் என்றுதான் தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழினம் வெறுத்து ஒதுக்கிய சிலர், தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட சிலர் மட்டும், கொஞ்சம்கூட அரசியல் நாகரீகமே இல்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் கல்லூரிகள் திறந்து, பாடம் நடத்தினாலும் அவர்களுக்கு அரசியல் நாகரீகம் வரவே வராது. ஏற்கனவே ஆண்ட சிலருக்கும், இனி ஆள நினைக்கும் சிலருக்கும், தலைசிறந்த முன்னுதாரணம் மாண்புமிகு அம்மா அவர்கள்.

தமிழகத்துக்கு பெருமை
பலருக்கு அரசியல் பாடமாகத் திகழ்பவர் மாண்புமிகு அம்மா அவர்கள் அவர்களின் திருவுருவப் படம் சட்டமன்றத்திலே திறக்கப்படுவது, சட்டமன்றத்திற்குப் பெருமை., தமிழ் நாட்டுக்கே பெருமை., ஏன்., உலக தமிழர்களுக்கே பெருமை. அந்த பெரும் புகழ் மாண்புமிகு அம்மா அவர்களுக்குக் கிடைத்து விடக் கூடாது என்று பொறாமையால் புழுங்கி, சிலர் கூறும் கருத்துக்கள் மக்கள் மத்தியிலே எடுபடவில்லை என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அநாகரீகம்
மக்கள் மன்றத்தில் மதிப்பிழந்து போனவர்கள், சட்டமன்றத்தின் மாண்பு பற்றிப் பேசும் அநாகரீகச் செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏழரைக் கோடி தமிழக மக்களின் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றரைக் கோடி விசுவாசமிக்க தொண்டர்களின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications