எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி எங்களால் கவிழாது... ஆனால் கவிழும் - பொடி வைத்து பேசிய ஓபிஎஸ்
தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி எங்களால் கவிழும் சூழல் ஏற்படாது... ஆனால் கவிழும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சேலம்: ஆட்சியைக் கலைப்பது எங்கள் நோக்கமல்ல.... எங்களால் ஆட்சி கலையாது, ஆனால் அவர்களாகவே கவிழ்ப்பார்கள் என்று சேலத்தில் பொடி வைத்து பேசியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
நாங்கள் எதற்காக தனியாகப் பிரிந்து வந்தோமோ, அந்த நோக்கம் விரைவில் நிறைவேறும், இரட்டை இலை சின்னத்தை பெற தர்மயுத்தம் தொடரும் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க.(புரட்சி தலைவி அம்மா) அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா, கட்சி வளர்ச்சி குறித்த பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
அசத்திய அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மாவட்டத்தில் ஓபிஎஸ்க்கு அசத்தல் வரவேற்பு கொடுத்து அசத்தி விட்டனர். ஆள் உயர மாலை, வெள்ளி வீர வாள் என அதிகமாகவே உற்சாகப்படுத்தி விட்டனர். அதே உற்சாகத்தோடு பேச ஆரம்பித்த ஓபிஎஸ் கடைசி வரைக்கும் பேச்சை தொடர்ந்தார்.
ஜெயலலிதா
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு பின்பு மாபெரும் தலைவராக ஜெயலலிதா விளங்கியது வரலாறு கூறும். அந்த காலக்கட்டத்தில் அ.தி.மு.க.வை அழித்துவிட வேண்டும் என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி பல்வேறு இன்னல்களை கொடுத்தார். ஆனால் அதையும் முறியடித்து இந்தியாவில் தலைசிறந்த தலைவராக ஜெயலலிதா இருந்துள்ளார்.
அதிமுக என்னும் எஃகு கோட்டை
அதிமுகவை எம்.ஜி.ஆர்.விட்டு சென்றபோது இந்த இயக்கத்தில் 17 லட்சம் தொண்டர்கள் மட்டும் இருந்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு 28 ஆண்டுகளில் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, தற்போது அ.தி.மு.க.வில் ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு.
குடும்பத்தின் பிடியில் கட்சி
தொண்டர்கள் இயக்கமாகவும், ஆட்சி மக்கள் ஆட்சியாகவும் இருக்க வேண்டும் என்றும், ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும், ஆட்சியும் இருக்கக்கூடாது என்றும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தெரிவித்து வந்தனர். ஆனால் அவர்கள் கண்ட லட்சியம், பாதை இப்போது எங்கே சென்று கொண்டிருக்கிறது?.
சசிகலா, தினகரன் என ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சி சென்றுவிட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும். கட்சியை ஒருபோதும் ஒரு குடும்பத்தின் பிடியில் அடகு வைக்க விடமாட்டோம்.
தொண்டர்கள் விருப்பம்
அதிமுக தொண்டர்கள் விருப்பம் எதுவோ? அதன்படியே எங்களது பயணம் இருக்கும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் ஏற்பட்டுள்ள மர்ம முடிச்சு விலக்கப்பட வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள் 122 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு எப்படியும் இன்னும் 4 ஆண்டுகளுக்கு மெல்ல மெல்ல ஆட்சியை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
|
அரசியல் அநாதைகள்
இரண்டாக பிரிந்த அதிமுக இணைய விதிக்கப்பட்ட 2 கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை ஓயபோதில்லை, தவறான பாதையில் சென்று கொண்டிருப்பவர்கள், அவர்களது பாதையை மாற்றிக்கொண்டு எங்கள் பக்கம் வந்தால் அவர்களை மக்கள் மதிப்பார்கள். அப்படி வராவிட்டால் அரசியலில் அனாதையாகி விடுவார்கள்.
|
அவர்களாக கவிழ்ப்பார்கள்
கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட 122 எம்.எல்.ஏ.க்களும் மனசாட்சி படி செயல்பட வில்லை. அவர்களை செயல்பட விடாமல் தடுத்து வருகின்றனர். ஆளுக்கு ஒரு பேச்சு என்று தினசரி கருத்து கூறி வருகின்றனர். இந்த ஆட்சி எங்கள் அணியால் கலைக்கப்படும் நிலை வராது, அது அவர்களாலேயே கலைக்கப்படும். தினம் ஒரு வேண்டாத கருத்துகளை சொல்லும் அமைச்சர்களே கட்டுக்குள் வைக்க முடியாத நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்று பஞ்ச் வைத்து முடித்தார் ஓ.பன்னீர் செல்வம்.