பதவியில்லை என்ற விரக்தியில் பன்னீர் செல்வம் குழம்பி போய் பேசுகிறார் - விஜயபாஸ்கர்
பதவியில்லை என்ற விரக்தியிலும், தோல்வி பயத்திலும் குழப்பத்தில் ஓபிஎஸ் பேசுகிறார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை: பதவி பறிபோன விரக்தியிலும், ஆர்.கே. நகரில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்திலும் ஓபிஎஸ் தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஓ. பன்னீர் செல்வம் குழப்பமடைந்துள்ளதாகவும், இனியும் உளறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி பலவித தகவல்கள் தினசரியும் பரவி வருகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார்.
ஜெயலலிதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருடன் சசிகலா மட்டுமே உடன் இருந்தார். தமிழக அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கூட மருத்துவமனையில் அவரை பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட வில்லை.

அப்பல்லோவில் ஆளுநர்
தமிழக ஆளுநர் பொறுப்பில் உள்ள வித்யாசாகர்ராவ் மருத்துவமனைக்கு சென்றபோது ஜெயலலிதாவை பார்க்க அனுமதி மறுக்கப்பட அவர் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டு
ஜெயலலிதா மரணம் பற்றியும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இன்று வரை அவரது மறைவு தமிழகத்தில் புரியாத புதிராய் இருக்கிறது. இந்த நிலையில் ஆர்கே நகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ஓ.பன்னீர் செல்வம், பரபரப்பு குற்றச்சாட்டை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது சுமத்தியுள்ளார்.

வெளிநாடு சிகிச்சை
ஜெயலலிதாவை மேல்சிகிச்சைகாக வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல கூறினேன். ஆனால் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கர் வேண்டாம் என்று கூறிவிட்டதாக தெரிவித்தார். தனியார் டிவி நிகழ்ச்சியில் பேசிய போதும் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றியும், தம்பித்துரை, சி.விஜயபாஸ்கர் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சி. விஜயபாஸ்கர் பேட்டி
இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த போது அவர் சொன்னதை நாங்கள் கேட்கவில்லை என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு என்றார்.

தோல்வி பயம்
இடைத்தேர்தல் களத்தில் இதுபோன்ற தவறான அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்வது நிறுத்திக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு சிகிச்சை பற்றி அப்போதே ஆளுநரிடம் கூறியிருக்கலாமே. மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடுவிடமும் கூறியிருக்கலாமே என்றும் தெரிவித்தார்.

குழப்பத்தில் ஓபிஎஸ்
பதவியில்லை என்ற விரக்தியிலும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்திலும் ஒருவித குழப்பத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசுகிறார். இனியும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பேச்சுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications