2 கண்டிஷன்தான்.. ஏத்துக்கிட்டா 24 மணி நேரத்தில் இணையலாம்.. மாஃபா பாண்டியராஜன் தகவல்!
சென்னை: எங்களிடம் இரண்டே இரண்டு கோரிக்கைகள்தான் உள்ளன. அதை நிறைவேற்றினால் 24 மணி நேரத்தில் அதிமுக ஒன்றுபடும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
ஓ.பி.எஸ். தரப்பைச் சேர்ந்த பாண்டியராஜன் தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். தங்களது கோரிக்கைகள் வெளிப்படையானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ் தரப்பில் 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தினகரன் பக்கம் 29 பேர் அணிவகுத்துள்ளனர். வெறும் 93 பேர் மட்டுமே எடப்பாடி பக்கம் உள்ளனர். அதாவது மைனாரிட்டி அரசாக மாறியுள்ளது எடப்பாடி அரசு.
ஓ.பி.எஸ். அவசர ஆலோசனை
இந்த சிக்கலான நிலையில் எடப்பாடி அரசுக்கு ஆதரவு கொடுக்கும் நிலை வந்தால் என்ன மாதிரியான உத்தியை கையாளுவது என்று விவாதிப்பதற்காக இன்று ஓ.பி.எஸ். தரப்பு ஆலோசனையில் ஈடுபடுகிறது.
என்ன செய்யலாம்
சென்னையில் உள்ள ஓ.பி.எஸ். வீ்ட்டில் வைத்து இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது. சட்டசபைக் கூட்டத்தில் எப்படி செயல்படுவது, அதற்கு முன்பாகவே தினகரன் தரப்பால் எடப்பாடி அரசுக்குப் பிரச்சினை வருமா, வந்தால் எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
கவிழாது - பாண்டியராஜன்
இந்த நிலையில் மாஃ பாண்டியராஜன் தந்திக்கு அளித்துள்ள பேட்டியில், 29 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனை பார்த்தார்கள் என்பதால், அவர்கள் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் என்றோ, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்கள் என்றோ கருதமுடியாது. டி.டி.வி.தினகரனை பார்த்த எம்.எல்.ஏ.க்கள் அரசை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று கூறியிருக்கிறார்கள். எனவே இந்த அரசு கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை.
2 கோரிக்கைதான்
எங்களை பொறுத்தவரை 2 நிபந்தனைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். அதாவது சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கவேண்டும். மற்றொன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்தவேண்டும் என்பதுதான். இந்த நிபந்தனைகளை எளிதில் நிறைவேற்றும் காலம் தற்போது நெருங்கிவிட்டது.
24 மணி நேரத்தில் சேர முடியும்
இந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் பட்சத்தில் 24 மணி நேரத்தில் அதிமுகவில் பிளவுப்பட்ட 2 அணிகளும் இணைவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று பாண்டியராஜன் கூறியுள்ளார். இவர்களின் கோரிக்கையை எடப்பாடி ஏற்றாலும் கூட அவர்களிடம் வெறும் 105 எம்.எல்.ஏக்கள்தான் இருப்பார்கள். எனவே ஆட்சியைக் காப்பாற்றுவது கடினம். எனவே ஆட்சியைக் காப்பாற்ற விரும்பினால் எடப்பாடி அரசு, தினகரன் காலில்தான் போய் விழ வேண்டும் என்பதே நிதர்சனம்
இதற்குப் பேசாமல் ராஜினாமா செய்து விட்டு அத்தனை பேரும் மக்கள் காலில் விழுந்து விடலாம்.. பெஸ்ட்!