ஓபிஎஸ்ஸும், தம்பிதுரையும் பாஜகவுக்கு நெருக்கமாகவே உள்ளனர்... சொல்வது யார் தெரியுமா?
இருதுருவங்களாக உள்ள தம்பிதுரையும், ஓ.பன்னீர் செல்வமும் பாஜகவுக்கு இணக்கமாகவே உள்ளனர் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகர்கோவில்: அதிமுகவில் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஓ.பன்னீர் செல்வமும், தம்பிதுரையும் பாஜகவுடன் நெருக்கமாகவே உள்ளனர்; இரட்டை இலை முடக்கப்பட்டதற்கு மத்திய அரசு காரணம் அல்ல என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எடைக்கு எடை தங்கம் கொடுத்து வெற்றி பெறும் நோக்கில் கழகங்கள் உள்ளன. பாரம்பரியமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.
தொண்டர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுப்பது கட்சியின் சின்னம் மட்டுமே. அத்தகைய சின்னம் முடக்கப்பட்டிருப்பது ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு தலைகுனிவையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு மத்திய அரசு காரணமே இல்லை. ஏனெனில், அதிமுக கட்சியின் தலைமையும், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட உள்கட்சி பூசலும், அதிகாரப் போட்டியுமே காரணம்.
இன்னும் சொல்லபோனால், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வமும், தம்பித்துரையும் பாஜகவுடன் இணக்கமாகவே உள்ளனர். மேலும் திருமாவளவன், திருநாவுக்கரசர் ஆகியோரும் தனிப்பட்ட முறையில் நல்லுறவை பேணி காத்து வருகின்றனர்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications