பச்சமுத்துவின் ஜாமீன் மனு நிராகரிப்பு - 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: மருத்துவ கல்லூரியில் இடம்தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம். குழும தலைவரும் ஐ.ஜே.கே. கட்சி தலைவருமான பச்சமுத்துவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரியில் இடம் தருவதாகக் கூறி ரூ.72 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் வேந்தரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவருமான பச்சமுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
வியாழக்கிழமை மாலை பச்சமுத்து விசாரணைக்காக நேரில் ஆஜரானார். சென்னை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
சுமார் 15 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த விசாரணையின் முடிவில் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நேற்று மதியம் 12 மணிக்கு கைது செய்தனர். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியதை அடுத்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு மதியம் 3.30 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவச் சான்றிதழ் கேட்கப்பட்டது. அப்போது ஒரு வாரத்துக்கு முன் இருதயத்தில் ஆஞ்சியோ ஆபரேசன் செய்ததாக பச்சமுத்து கூறினார். இதனால் அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்துப் பார்க்க முடிவு செய்யப்பட்டது. அந்த வசதி ராயப்பேட்டை மருத்துவமனையில் இல்லாததால், அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டது.
பரிசோதனையில் அவர் முழு உடல் நலத்துடன் இருப்பது தெரியவந்தது. அந்த சான்றிதழைப் பெற்ற போலீசார் மாலை 6.30 மணிக்கு மீண்டும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தனர். அங்கு ஏற்கனவே பரிசோதித்த டாக்டர்களிடம் மீண்டும் சான்றிதழ் பெற்றனர். அதைத் தொடர்ந்து 7.30 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்குப் புறப்பட்டனர்.
சைதாப்பேட்டை 11வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் பிரகாஷ் முன்னிலையில் இரவு 8.35 மணிக்கு பச்சமுத்து ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில் அவரை செப்டம்பர் 9ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவு 12.30 மணிக்கு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பச்சமுத்து அழைத்து வரப்படுவார் என தகவல் வெளியானதை அடுத்து, நீதிமன்ற வளாகம் பரபரப்புக்கு உள்ளானது.எஸ்ஆர்எம் கல்வி குழுமத் தலைவரான பச்சமுத்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.