இரும்பு பைப்பால் அடித்த போலீஸ்.. ஜாமினில் வெளி வர பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மறுப்பு
சென்னை: டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராடிய தங்களை, போலீசார் காவலில் இருந்த போது இரும்புக் குழாய்களால் அடித்ததாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வரை ஜாமீனில் வெளிவர மாட்டோம் என்றும் சென்னை புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ளன. இதில், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.

அந்த வகையில், பூரண மதுவிலக்கு கோரியும், தங்கள் கல்லூரிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப் பட்டுள்ள அம்மாணவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
போராட்டம்...
03.08.2015 அன்று பச்சையப்பன் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரியும் பூரண மதுவிலக்கை அமல் படுத்தக் கோரியும் நாங்கள் போராட்டம் நடத்தினோம்.

தமிழக அரசு மதிப்பதில்லை...
தமிழகத்தில் மாணவர்களும் மாணவிகளும் சின்னஞ்சிறு பள்ளிப் பிள்ளைகளும் கூட மதுவுக்கு அடிமையாக்கப்படும் வகையில் மது விற்பனையை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஏறத்தாழ சரிபாதி அளவிலானவை, விதிமுறைகளுக்கு எதிராக, பள்ளி, கல்லூரி, வழிபாட்டு இடங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றுக்கு அருகில் அமைக்கப்பட்டிருப்பதையும், இவற்றை அகற்றுவது குறித்த உயர்நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு மதிப்பதில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டம்...
சட்ட விரோத, சமூக விரோத நடவடிக்கைகளின் காவலனாக அரசே செயல்பட்டு வரும் நிலையில், இதனை சகித்துக்கொள்ள மக்களும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.
சீரழியும் மாணவர்கள்...
டாஸ்மாக்கினால் சீரழிக்கப்படுபவர்களில் முக்கியமானவர்கள் மாணவர்கள். இதனை நாங்கள் கண் முன்னே பார்த்து வருவதால், நாங்களும் போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்கள் மீது போலீசார் சட்ட விரோதமாகவும், மூர்க்கத்தனமாகவும் தடியடி நடத்தினர். பல கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் பொய் வழக்கும் போட்டிருக்கின்றனர். எங்களைக் கைது செய்தது குறித்தோ, ரிமாண்டு செய்திருப்பது குறித்தோ எங்களது குடும்பத்தினர்க்கு போலீசார் தகவல் தரவில்லை.

இரும்புக் குழாய்களால் அடித்தனர்...
காவலில் வைக்கப்பட்டிருந்த எங்களை, இரும்புக் குழாய்களால் போலீசார் அடித்தனர். நிற்கவோ நடக்கவோ முடியாத நிலையில் நீதித்துறை நடுவர் முன் நாங்கள் ஆஜர் படுத்தப்பட்டோம். நாங்கள் சட்டவிரோதமாக போலீஸ் காவலிலும் தாக்கப்பட்டதை நடுவர் பதிவு செய்து கொண்டதுடன், எங்களை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பவும் உத்தரவிட்டார்.
கண்டனம்...
நாங்கள் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், எல்லாக் கட்சியினரும் ஊடகங்களும் இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். எங்களை சிறையில் வந்தும் சந்தித்தனர். இதனை அரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது.
பொய்யான செய்தி...
நாங்கள் அரசியல் கட்சியினர் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டதாக ஒரு பொய்யான செய்தியை ஊடகங்களுக்கு அரசே கொடுத்திருக்கிறது. அது மட்டுமின்றி, நாங்களெல்லாம் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் என்று அபாண்டமான ஒரு பொய்யை அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கூறுகிறார். எங்களுக்கு எதிராக பேசும்படி பச்சையப்பன் கல்லூரி முதல்வரும் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்.
நயவஞ்சக அரசு...
நியாயமான ஒரு கோரிக்கைக்காக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் முன் நின்ற எங்களுக்கு எதிராக வன்மத்துடனும் நயவஞ்சகமாகவும் அரசு நடந்து வருகிறது. இதனை மாணவர் சமுதாயத்தின் கவனத்துக்கு கொண்டு வர நாங்கள் விழைகிறோம்.

கோரிக்கை...
நாங்கள் குற்றம் எதுவும் செய்து விட்டு சிறைக்கு வரவில்லை. அரசு இழைத்து வரும் குற்றத்தை தட்டிக் கேட்டதற்காக தண்டிக்கப் பட்டிருக்கிறோம். எனவே, எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற்று எங்களை விடுவிக்க வேண்டும். எங்கள் மீது சட்டவிரோதமான முறையில் தாக்குதல் தொடுத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
ஜாமீனில் வெளி வரமாட்டோம்...
இதற்கு அரசு பதில் சொல்லும் வரை நாங்கள் பிணையில் வெளியே வர விரும்பவில்லை. பிணையில் வருவதில்லை என்ற இந்த முடிவு குறித்து எங்களது பெற்றோருக்கும் தெரிவித்திருக்கிறோம். நாங்கள் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த பிணை மனுவை மேல் நடத்த நாங்கள் விரும்பவில்லை.
நேரடி ஒப்புதல் இன்றி...
எங்களுடைய நேரடியான ஒப்புதல் இன்றி, எங்கள் சார்பாக வேறு யாரொருவர் தாக்கல் செய்கின்ற பிணை மனுவையும் விசாரணைக்கு ஏற்க வேண்டாமென்று எமது வழக்குரைஞர்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மாணவர்கள் விபரம்:
டாஸ்மாக் சாரயக்கடைக்கு எதிராகப் போராடி சிறை சென்றுள்ள புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியினரின் விபரம்: 1.செல்வகுமார் ஆண் வயது - 25 த/ பெ .முனுசாமி, 2.மாரிமுத்து வயது - 23 த / பெ - சீதாராமன்,3.தினேஷ் (எ) சுரேஷ் வயது - 23 த/பெ. சங்கர் (எ) வெங்கட்ராமன்,4.மருது (எ) நினைவேந்தன் வயது - 23, த/பெ பழனி,5.அன்பு வயது - 24 த/பெ அய்யனார்,6.திருமலை வயது - 26 த/பெ ஆறுமுகம்,7.சாரதி வயது -28 த/பெ - வாள்மூர்த்தி, 8.பூபாலன் வயது - 19 த/பெ சசிக்குமார்,9.ஆசாத் வயது 30 த/பெ - கிருஷ்ணமூர்த்தி, 10.மாரி வயது - 19 த/பெ சீனு, 11.ஜான்சி வயது 23 த/பெ கதிர்வேலு, 12.கனிமொழி வயது 22 த/பெ முருகன், 13. ரூபாவதி வயது 22 த/பெ சங்கர்,14. வாணிசிறீ வயது - 23 த/பெ . கணேசன், 15.நிவேதிதா வயது - 23 த/பெ .பழனி












Click it and Unblock the Notifications