பாலமேட்டில் 16 ம் தேதி ஜல்லிக்கட்டு... 988 காளைகள் சீறிப்பாய ரெடி!
பாலமேடு: வரும் 16-ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு முடிவடைந்தது.
பாலமேடு: வரும் 16-ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு முடிவடைந்தது.
அதிகாலை முதல் காத்துக்கிடந்து 988 காளைகளை அதன் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுச் சென்றனர்.
வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.இதற்காக, 3 பகுதிகளிலும் வாடிவாசல், தடுப்பு, கேலரி, மைதானம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

முன்பதிவு தொடக்கம்
இதில் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிகாலை முதல் காத்துக்கிடந்து முன்பதிவு செய்தனர். அதே போல், 988 காளைகளை அதன் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுச் சென்றனர்.

மருத்துவ பரிசோதனை
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு 10 டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இன்று பதிவு செய்யப்பட்ட காளைகளுக்கு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் நாளன்று மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு களத்தில் அனுமதிக்கப்பட உள்ளன

கட்டுப்பாடுகள்
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 150 செ.மீ. உயரம் இருக்க வேண்டும், 55 கிலோ எடை அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

போலீசார் குவிப்பு
தேர்வான இளைஞர்களுக்கு ரத்த அழுத்தம், வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். மாடுபிடி வீரர்கள் முன்பதிவையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

848 மாடுபிடி வீரர்கள்
நேற்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேர்வில் மொத்தம் 876 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வில் 28 பேர் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

600 மாடுபிடி வீரர்கள்
இதேபோல் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நேற்று நடந்தது. 650 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதில் 600 வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். மாடுகளுக்கான தகுதிச்சான்று விநியோகம் நேற்றுடன் நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications