புதிய ஆண்டில் ஆக்கப்பூர்வமாய் செயல்படுவோம்- பண்ருட்டி வேல்முருகனின் புத்தாண்டு வாழ்த்து!
சென்னை: ஆங்கிலப் புத்தாண்டான 2016 பிறப்பதனை ஒட்டி மக்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரான பண்ருட்டி தி.வேல்முருகன்.
இதுகுறித்த அவரது வாழ்த்துச் செய்தியில், "உதயமாகும் 2016ஆம் ஆண்டில் அனைத்து தமிழ் மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த அன்பு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத் தமிழர் இனம் ஆண்டாண்டு காலமாக தம்முடைய உரிமைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. தமிழினம் இன்னமும் தமக்கே உரித்தான வாழ்வுரிமையையும் சுதந்திரத்தையும் முற்று முழுதாக மீட்டெடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுவிடவில்லை. 2015 ஆம் ஆண்டு இறுதியில் நம்மை பெருந்துயரத்தில் மூழ்கடித்த இயற்கை பேரிடரில் இருந்து இன்னமும் நாம் மீளாத நிலையில் உதயமாகிறது 2016.
வரப்போகும் 2016 ஆம் ஆண்டிலும் நமக்கான போராட்டங்களும் போர்க்களங்களும் நிறையவே காத்துக் கிடக்கின்றன. குறிப்பாக கால் நூற்றாண்டு காலமாக சிறையில் வாடி வரும் நம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து வகையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது முதன்மை பணியாக உள்ளது.
இயற்கைப் பெருவெள்ளத்தால் அனைத்தையும் இழந்த நம் மக்களை இயல்பு நிலைக்கு மீண்டும் கொண்டுவர வேண்டிய பெரும் கடமையும் நம் முன்னே உள்ளது. இந்த புதிய ஆண்டில் நாம் எதிர்கொண்டிருக்கும் அனைத்து வாழ்வுரிமைப் பிரச்சனைகளிலும் முழுமையாக வெற்றி காண அயராது போராடுவோம் என்பதையே இந்த புத்தாண்டு நாள் உறுதிமொழியாகக் கொள்வோம்.
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையில் இருந்து ஈழத் தமிழர்கள் முழுமையாக விடுதலை பெறுவதற்கான அரசியல் நகர்வுகளை சர்வதேச அரங்கில் முனைப்புடன் தொடர்வோம். தமிழர் வாழ்வு உரிமைகள் மீட்கப்பட்டு ஏற்றமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக திகழ வேண்டும் என இந்தப் புதிய ஆண்டில் என் அன்பு நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.