நடிகர் சந்தானம் மீது ரூ.81 லட்சம் மோசடி புகார்: வரும் 28 ஆம் தேதி நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
சென்னை: ரூ.81 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் சந்தானம் மற்றும் இயக்குநர் ராம்பாலா ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகுமாறு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பேப்பர் பிளைட் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மஸ்தான் சர்பூதீன் என்பவர் சென்னை 14-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
எங்கள் நிறுவனத்தின் சார்பில், ‘ஆவி பறக்க ஒரு கதை' என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க முடிவு செய்தோம். இந்த படத்தின் இயக்குனராக ராம்பாலா என்பவர் நியமிக்கப்பட்டார்.
இதற்காக ரூ.11 லட்சம் சம்பளம் பேசி, ரூ.3 லட்சம் அவருக்கு முன்தொகையும் கொடுக்கப்பட்டது. படத்தின் கதாநாயகனாக நடிகர் சிவா, கதாநாயகியாக நடிகை நந்திதா ஆகியோரை தேர்வு செய்து, அவர்களுக்கும் முன்தொகையாக பல லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.
ஆவி பறக்க ஒரு கதை என்ற தலைப்பை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில், கடந்த மார்ச் 12-ஆம் தேதி பதிவு செய்துள்ளேன். ஆனால், எந்த ஒரு சரியான காரணங்களையும் கூறாமல், படத்தை எடுக்காமல் இயக்குனர் ராம்பாலா இழுத்தடித்து வந்தார்.
இதுவரை ரூ.81 லட்சத்துக்கும் மேல் செலவு செய்துள்ளேன். இதுகுறித்து அவருக்கும், திரைப்படம், தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கவுன்சிலுக்கும் நோட்டீஸ் அனுப்பினேன்.
இந்த நிலையில், நடிகர் சந்தானத்துடன், இயக்குனர் ராம்பாலா கைகோர்த்து, என்னுடைய ‘ஆவி பறக்க ஒரு கதை' படத்தின் கதையை, ‘தில்லுக்கு துட்டு' என்ற தலைப்பில் எடுத்துள்ளார். இதுகுறித்து சந்தானத்திடம் கேட்டபோது, ‘உன்னால் என்ன செய்ய முடியுமோ? அதை செய்' என்று கூறியது மட்டுமல்லாமல், மிரட்டலும் விடுத்தார். இதற்கு இயக்குநரும் உரிய பதில் அளிக்கவில்லை.
கடந்த ஏப்ரலில் காவல் ஆணையரிடமும் புகார் செய்தேன். இந்த படத்தை விரைவில் வெளியிட உள்ளனர். படம் வெளியானால், எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தில்லுக்கு துட்டு என்ற படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு 14-வது உதவி சிட்டி சிவில் நீதிபதி கணபதிசாமி (பொறுப்பு) முன்பு வெள்ளிக்கிழமை மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக, வரும் 28-ஆம் தேதி இயக்குனர் ராம்பாலா, நடிகர் சந்தானம் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications