பரமக்குடியில் மர்மத்தீ – திடீரென்று எரியும் பொருட்களால் மக்கள் பீதி!
பரமக்குடி: பரமக்குடி அருகே மேலாய்குடி கிராமத்தில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் கிராம மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள மேலாய்குடி கிராமத்தில், 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 6 நாட்களுக்கு முன்னர் அப்பகுதியை சேர்ந்த 3 பேரின் வீடுகளில் உள்ள துணிகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
வீடுகளில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். ஆனால், தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை.
தானாகவே எரிந்த பொருட்கள்:
மறுநாள் அருகிலுள்ள மேலும் 2 பேரின் வீடுகளில் இருந்த பிளாஸ்டிக் சேர்கள், துணிகள் தீப்பற்றி எரிந்தன. மேலும், அருகே இருந்த மற்ற பொருட்களும் தானாகவே பற்றி எரிந்தன. இதனால் இந்த வீடுகளில் இருந்தவர்கள் அலறியபடி வெளியே ஓடி வந்தனர்.
காரணமில்லாமல் தீ:
தொடர்ந்து ஒருசிலரின் வீட்டு கூரையும் தீப்பிடித்து எரிந்தது. இதற்கு மின்கசிவு உள்ளிட்ட எந்த காரணங்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தீப்பற்றியதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சிறப்பு பூஜைகள்:
இதை தொடர்ந்து கிராமத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜை செய்யப்பட்ட வேப்ப இலைகளை பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு சொருகி வைத்துள்ளனர். இருப்பினும் நேற்று முன்தினமும் சில வீடுகளில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன.
நிம்மதியில்லாத மக்கள்:
இதனால் கிராம மக்கள் வேலைக்கு செல்ல முடியாமலும், நிம்மதியாக இரவில் தூங்க முடியாமலும் அவதியடைந்து வருகின்றனர். பரமக்குடி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் மேலாய்குடி கிராமத்தில் விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணை:
பாஸ்பரசை பொருட்கள் மீது போட்டால் தீப்பற்றும் என்பதால், எரிந்த துணிகளை சோதனைக்காக எடுத்து சென்றனர். மேலும் கிராமத்திற்கு வந்து செல்லும் சாமியார்கள், குறி சொல்வோர், குடுகுடுப்பைகாரர்கள் என பலரையும் பிடித்து விசாரித்தனர்.
பாஸ்பரஸ் சந்தேகம்:
போலீசார் கூறுகையில், "முன்விரோதம் காரணமாக யாராவது பாஸ்பரசை தூவியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. மேலும் இது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.