சென்னை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சேகர் ரெட்டி நண்பர் பரஸ்லால் லோதா! ஜன. 19வரை நீதிமன்ற காவல்
சென்னை: சேகர் ரெட்டிக்கு, புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட, கொல்கத்தா தொழிலதிபர் பரஸ்மல் லோதா, இன்று சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் அதை தள்ளுபடி செய்த நீதிமன்றம், பரஸ்லால் லோதாவுக்கு ஜன. 19 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான, சென்னை தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த டிசம்பர் 8ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து ரூ. 147 கோடியும், 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ. 24 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம்குமார் மற்றும் கூட்டாளிகளான திண்டுக் கல் சர்வேயர் ரத்தினம், முத்துப் பட்டினம் ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சேகர் ரெட்டி தரப்பினர் மீது சென்னை சிபிஐ போலீஸார் பதிவு செய்துள்ள முதல் வழக்கில், 6வது குற்றவாளியாக கொல்கத்தா தொழிலதிபர் பரஸ்மால் லோதாவையும் சேர்த்துள்ளனர்.
சேகர் ரெட்டிக்கு, புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை, சென்னையில் வைத்து விசாரிக்கக் கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்ததையடுத்து, அதற்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதியளித்தது. மும்பை அமலாக்கத்துறையினர், பரஸ்மால் லோதாவை இன்று சென்னைக்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து இதையடுத்து மாலை 4 மணியளவில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை செய்யும் வகையில் காவலில் எடுக்க அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது. ஆனால் பரஸ்லால் லோதா, தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, பரஸ்லால் லோதாவுக்கு, ஜனவரி 19 வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது.