காதில் ரத்தம் வழிந்ததால் மாணவன் “சீரியஸ்” - ஆசிரியர்களின் அலட்சியமே காரணம் என பெற்றோர் புகார்
தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாடிய போது மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு காதில் ரத்தம் வழிந்ததற்கு ஆசிரியர்கள் அலட்சியமாக இருந்ததே காரணம் என்று பெற்றோர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
தேவகோட்டை மாட்டுச்சந்தை தெரு பெயின்டிங் தொழிலாளி அழகர்சாமி. இவரது மூத்த மகன் அருண்குமார். தேவகோட்டை நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை மாணவர்கள் விளையாடினர். அப்போது அருண்குமார் கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த அடிபட்டு காது வழியே ரத்தம் வழிந்துள்ளது. இதனை பார்த்த ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்தையொட்டி உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு மாணவரை அழைத்து சென்றுள்ளார். அவர்கள் காதில் ரத்தம் வழிவதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என கூறியுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் இருவர் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு மாணவரை அனுப்பி வைத்தனர். மாணவர்களாக வந்ததால் பெரியவர்களை அழைத்து வரும்படி கூறியுள்ளனர். சிகிச்சைக்காக வந்த ஒருவர் அருண்குமாரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இதுகுறித்து அருண்குமாரின் தாய் ராசாத்தி, "11 மணிக்கு மாணவர்களுக்குள் நடந்த சண்டையில் அருண்குமார் தலையில் அடிபட்டு காதிலும்,மூக்கிலும் ரத்தம் வந்தும் தலைமையாசிரியர் எங்களிடம் தெரிவிக்கவில்லை.பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கு மகன் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
அக்கம் பக்கம் இருந்தோர் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். சிவகங்கை கொண்டு செல்லும் போது மீண்டும் மயக்கமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். எனது மகனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் தலைமையாசிரியர் தான் பொறுப்பு. இச்சம்பவத்தில் மாவட்ட கல்வி அலுவலர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியகளிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.