ஆசிரியைகளை கைது செய்யவும் அரசே.. உங்க பணம் வேண்டாம்.. தற்கொலை செய்த 4 மாணவிகளின் பெற்றோர் தடாலடி
கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட 4 மாணவிகளின் பெற்றோர் அரசு வழங்கிய நிவாரண தொகையை ஏற்க மறுத்துள்ளனர்.
Recommended Video
வேலூர்: கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட 4 மாணவிகளின் பெற்றோர் அரசு வழங்கிய நிவாரண தொகையை ஏற்க மறுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மனிஷா, ரேவதி, தீபா, சங்கரி ஆகியோர் கடந்த 24-ந் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.இதில் மாணவிகள் அளித்த தகவலின்படி சம்பந்தப்பட்ட 2 ஆசிரியைகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நிவாரணம் அறிவித்த அரசு
இந்நிலையில் மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அண்மையில் அறிவித்தார்.
அதன்படி நிவாரண தொகையை வழங்குவதற்காக 4 மாணவிகளின் பெற்றோரை நெமிலி தாசில்தார் பாஸ்கரன் மற்றும் போலீசார் அழைத்துக் கொண்டு ராணிப்பேட்டை சப்கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர்.
பெற்றோரிடம் விசாரணை
அப்போது மாணவிகளின் தற்கொலை குறித்து பெற்றோரிடம் சப்கலெக்டர் வேணு சேகரன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு வழங்கிய 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை சப்கலெக்டர் அவர்களிடம் வழங்கினார்.
கைது செய்ய கோரிக்கை
ஆனால் அதனை பெற்றோர்கள் வாங்க மறுத்துவிட்டனர். தங்கள் குழந்தைகளின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றினால்
மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் சப்கலெக்டரிம் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளிள் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் நிவாரண தொகையை பெற்றுக்கொள்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.