அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை.. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்
கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே அரசு பள்ளியில் போதிய ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படாததைக் கண்டித்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கீழ்முரசுப்பட்டி கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களான கீழ்முரசுப்பட்டி, மேல் முரசுப்பட்டி, கும்மனூர், ஒசஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் 7 ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் உள்ளதாகவும், ஆனால் கடந்த மாதம் வரை 4 ஆசிரியர்களே பணியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களில் 3 பேர் கடந்த அக்டோபர் மாதம் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றலாகி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது, 200 மாணவ மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியை மட்டும் பணியாற்றி வருகிறார். அந்த ஆசிரியை, சூளகிரியிலிருந்து தினமும், இந்த பள்ளிக்கு வந்து செல்கிறார். ஆசிரியர்களின் பற்றாக்குறையால் கடந்த 15 நாட்களாக மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையே மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் எனக் கோரி மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி ஊராட்சி தலைவர் மாதையன் மற்றும் ஊர் பெரியவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களின் பெற்றோர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications