நல்லா பேசுங்க, நமக்கே ஓட்டைப் போட்டுருங்க... ஸ்ரீரங்கத்தில் ஃப்ரீ ரீசார்ஜ் 'ஆபர்' தரும் கட்சிகள்!
திருச்சி: ஓட்டுப்போட பணமாகவோ,பொருளாகவோ கொடுத்தால் 2 ஆண்டுகள் சிறைதண்டனை கொடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர தயாராகியுள்ளது மத்திய அரசு.
தேர்தல் ஆணையமும் கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு கண்காணித்தாலும், எப்படியும் கொடுப்போம்... எதையாவது கொடுத்து அசத்துவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றன அரசியல் கட்சிகள்.
இடைத்தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில் திகு திகுவென தீப்பற்றிக்கொண்டுள்ளது போல உள்ளது ஸ்ரீரங்கம் தொகுதி.
கைமாறும் பணம்
பொடி நடையாக நடந்து அமைச்சர்கள் ஓட்டுகேட்டுவிட்டு போக.... அவர்களை பின் தொடரும் இளசுகள் சிலர்தான் வாக்காளர்களை வகையாக கவனிக்கிறார்களாம். பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் பட்டுவாடாவை முடித்துவிட வேண்டும் என்பது உத்தரவாம்.
ரீசார்ஜ் போடுவோம்ல
ஏரியாவில் உள்ள ரீசார்ஜ் கடைகளுக்கும் பணம் கொடுத்து வைத்துள்ளார்கள். குறிப்பிட்ட கடைக்குப் போனால் கேட்கும் தொகைக்கு இலவசமாக ரீசார்ஜ் செய்துகொள்ளலாமாம். என்கிறார்கள்.
மாறுவேடத்தில் உலா
கிராமங்களில் உள்ள தே.மு.தி.க ஆட்களை வலைவீசி முதலில் பிடிக்கும்படி மேலிட உத்தரவாம். இதற்காக அமைச்சர்கள் மாறுவேடத்தில் ராத்திரி வேட்டையை சந்தடியில்லாமல் ஆரம்பித்துவிட்டார்கள். அதோடு மாற்று கட்சிக்காரர்களையும் குடும்பம் குடும்பமாக தங்கள் பக்கம் வளைத்து வருகிறார்களாம்.
நாங்களும் பிடிப்போம்ல
செந்தில்பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோர் இடையே ஆள்பிடிப்பதில் போட்டியாம். விஜயபாஸ்கர் தரப்பில் இதுவரை 150 தே.மு.தி.கவினரை இழுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கேட்டதெல்லாம் கிடைக்கும்
அதிக ஓட்டுகளை வாங்க வேண்டும் என்பதற்காக செங்கோட்டையனுக்கு ஸ்பெஷல் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதற்காக அங்கே இரண்டு வீடுகளை வாடகைக்குப் பிடித்து தன் ஆதரவாளர்களுடன் செட்டிலாகிவிட்டாராம் செங்கோட்டையன். அந்த ஏரியா பிரச்னைகளைப் பற்றி கிராம மக்களுடன் பேசியும், அதை தீர்த்து வைப்பதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார் செங்கோட்டையன். அந்த ஊர்மக்கள் கேட்டதெல்லாம் கிடைக்கிறதாம்!.
தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஆணையம் பணம் பட்டுவாடாவை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
வீடியோ பதிவு
தொகுதி முழுவதும் 8 புதிய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அந்த வழியாக வரும் வாகனங்கள் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசாரால் சோதனை நடத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. வேட்பாளர்களின் பிரசாரங்களும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
நான்கு முனை போட்டி
ஸ்ரீரங்கம் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி, தி.மு.க. வேட்பாளர் ஆனந்த், பாஜக வேட்பாளர் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் அண்ணாதுரை உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்தான் என 4 முனை போட்டி உருவாகி இருந்தாலும் அ.தி.மு.க.- தி.மு.க. இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
திமுகவின் வியூகம்
அதிமுகவில் 10 பூத்களுக்கு ஒரு குழு என பிரிக்கப்பட்டு அ.தி.மு.க. தீவிர பிராசரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதேபோன்று தி.மு.க. விலும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என ஏராளமானோர் களம் இறங்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்தி வருகிறார். அ.தி.மு.க.வின் தீவிர பிரசாரத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் வாக்காளர்களை அடிக்கடி சந்தித்து ஓட்டு கேட்கும் வகையில் தி.மு.க. வியூகம் வகுத்துள்ளது.
பாஜக வியூகம்
பாஜக தரப்பில் களம் இறங்கிய சுப்பிரமணியம், தனது வேட்பு மனு தள்ளுபடி ஆகாமல் தப்பியதே பெரிய வெற்றி என்ற எண்ணத்தில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். பிரதமர் மோடியின் புதிய திட்டங்கள், ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை முன்னிருத்தி பாஜக வியூகம் வகுத்துள்ளது.
எளிமை கம்யூனிஸ்ட்கள்
அ.தி.மு.க.-தி.மு.க. கட்சிகளின் பிராசரத்துடன் ஒப்பிடும்போது பாஜக தரப்பு சற்று தொய்வுடன் காணப்பட்டாலும் போகப்போக விறுவிறுப்பு காட்டும் என எதிர்பார்க்கலாம். கம்யூனிஸ்டு வேட்பாளர் அண்ணாத்துரை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பிருந்து பிரசாரத்தை மிக எளிமையாக தொடங்கினார்.
மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கமாக எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்கின்றனர் கம்யூனிஸ்டு கட்சியினர்.
டிராபிக் ராமசாமி
இவர்களுக்கு இடையே சுயேட்சையாக போட்டியிடும் டிராபிக் ராமசாமி இரட்டை வாய்க்கால் பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் டிராபிக் ராமசாமி வாக்காளர்களை நேரில் சந்தித்து தன்னை அறிமுகப்படுத்தி வாக்கு கேட்கிறார். இவரைத் தவிர களத்தில் உள்ள பிற சுயேட்சை வேட்பாளர்களை தொகுதியில் தேடித்தான் கண்டுபிடிக்கும் நிலை உள்ளது.
பிரசாரத்தில் அனல்
தேர்தல் பிரசாரம் வரும் 11ஆம்தேதி மாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதியில் குவிந்துள்ள வெளி மாவட்ட அரசியல் பிரமுகர்களாலும், ஆர்ப்பாட்டமான பிரசாரத்தாலும் தேர்தல் களத்தில் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.
ஒரே குழப்பம்தான்
தி.மு.க வேட்பாளர் ஆனந்த்துக்கு செக் வைக்கும் வகையில் சுயேட்சையாக இன்னொரு ஆனந்தை அ.தி.மு.க களமிறக்க, தி.மு.க தரப்போ, அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.வளர்மதிக்கு போட்டியாக எஸ்.வளர்மதி, டி.வளர்மதி என இரண்டு பேரை சுயேட்சையாக இறக்கியுள்ளனர். வாக்காளர்கள் மத்தியில் பெயர் குழப்பத்தை உண்டாக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் திட்டமாம். மக்கள் பெயரைப்பார்த்த ஓட்டுபோடப்போகிறார்கள். சின்னம்தானே மனதில் நிற்கும் என்று வாக்காளர்களுக்கு தெரியாதா என்ன?