மதுரை அரசுப் பேருந்து மேல் பெட்ரோல் குண்டு வீச்சு- அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்
மதுரை: மதுரை அருகே அரசுப் பேருந்து ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து கருப்புக்கால் கிராமத்துக்குச் சென்ற நகரப் பேருந்தில் 3 பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் என 5 பேர் பயணம் செய்தனர். ஓடப்பட்டி பாலம் அருகே பயணி போல் நின்ற நபர் ஒருவர் பேருந்தை நிறுத்துமாறு சைகை காட்டினார்.
இதையடுத்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திய போது அந்த நபர் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை பேருந்தின் மீது வீசினார். மற்றொரு நபர் பேருந்தின் முன்புற படிக்கட்டின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதையடுத்து தீ வைத்த நபர்கள் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
பேருந்தினுள் தீப்பிடித்ததில் அதிர்ச்சியடைந்த பயணிகள் பின்புறப் படிக்கட்டு வழியாகக் கீழே இறங்கி உயிர் தப்பினர். இதையடுத்து ஓட்டுநர், நடத்துனர் ஆகியோர் தீயை அணைத்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தீ வைத்த நபர்கள் அப்பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகள் வழியாக காரில் தப்பிச் சென்றனரா என அங்குள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சோதனைச் சாவடிகளில் தீவிர வாகன கண்காணிப்பும் நடைபெற்று வருகிறது.