காந்தி நினைவுதினம்: ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி: உறுதிமொழி ஏற்பு
சென்னை: மகாத்மா காந்தியின் 67வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
சென்னை மெரீனாவில் காந்தி சிலை அருகே சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் வழிபாடு நிகழ்ச்சியில் ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, கலந்து கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள் தீண்டாமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஆளுநர் – முதல்வர்
சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகாத்மாவிற்கு மரியாதை
பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி
இதைத் தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஜெயலலிதா வாசிக்க அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
ஆளுநர் ரோசய்யா தலைமையில் ராஜ்பவனில் நடந்த தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.
விஜயகாந்த் அஞ்சலி
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மகாத்மா காந்தியடிகளின் 67வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் பகுதி, வட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.