தமிழகத்தில் டெங்கு காய்ச்சலே இல்லை.. எல்லோரும் நல்லா இருக்காங்க: அமைச்சர் கருப்பண்ணன்
திருப்பதி ஏழுமலையான் அருளால் தமிழகத்தில் அனைவரும் நலமுடன் இருப்பதாக அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறியுள்ளார்.
திருப்பதி: டெங்கு காய்ச்சல் எல்லாம் தமிழ்நாட்டில் எதுவுமில்லை, தமிழ்நாட்டில் எல்லோரும் சுகமாக இருக்கிறார்கள் என்று அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரியும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் ஒருவரே தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் எதுவுமேயில்லை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
அமைச்சர் கே.சி. கருப்பணன்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
அமைச்சருக்கு லட்டு பிரசாதம்
அமைச்சருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தம், லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர். பின்னர் கோவிலிக்கு வெளியே செய்தியாளர்களிடம் அமைச்சரிடம் டெங்கு பாதிப்பு பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றார்.
ஏழுமலையான் அருளால் நலம்
தமிழ்நாட்டில் ஏழுமலையான் அருளால் எல்லோரும் நலமாக இருக்கின்றனர். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எல்லோரும் சுகமாக இருக்கிறார்கள் என்று கூறிவிட்டு வேகமாக சென்றார் அமைச்சர் கே.சி. கருப்பணன்.
நொய்யல் ஆற்றில் சோப்புநுரை
இதே அமைச்சர்தான் நொய்யல் ஆற்றில் சோப்பு நுரைதான் பொங்குகிறது. மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் பொங்கிய நுரை என்றும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.