கலாம் நினைவிடத்தில் இன்றும் மக்கள் கூட்டம்.. திருமண் பூசி சபதம் செய்யும் மாணவர்கள்
ராமேஸ்வரம்: மக்களின் ஜனாதிபதி என போற்றப்படும், அப்துல் கலாம் புதைக்கப்பட்ட இடத்தில், இன்றும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மாணவர்கள் அவர் புதைக்கப்பட்ட இடத்தின் மண்ணை எடுத்து நெற்றியில் பூசி அவரது கனவுகளை நிறைவேற்ற சபதம் செய்து செல்கின்றனர்.
அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று மாலை வரை விஐபிகள் பலரும் அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்ததால் பொதுமக்கள் எளிதாக நினைவிடத்திற்கு செல்ல முடியவில்லை. ஆனால் நேற்று இரவு முதல் பொதுமக்கள் அங்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
கலாம், புதைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். வருவோர்கள், ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லம், அவர் படித்த துவக்கப் பள்ளி ஆகியவற்றையும் பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இரவு நேரத்திலும் நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட வசதியாக மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. நினைவிடத்தை பார்வையிட்டு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதியை தங்கச்சிமடம் ஊராட்சி செய்துள்ளது. கலாமின் நினைவிடத்தில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மாணவ, மாணவிகள், இளைஞர்கள், கலாம் நினைவிட மண்ணை எடுத்து நெற்றியில் பூசி, அவரது கனவை நனவாக்கி இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவி செய்வதாக சபதம் செய்தனர்.
பெங்களூரில் இருந்து வந்திருந்த மாணவர் சதீஷ், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர், ராஜசேகர், மாணவி உமா தேவி ஆகியோர் கூறுகையில், "மாணவர், இளைஞர்கள் மத்தியில் லட்சிய கனவு காண சொல்லி கலாம் எழுச்சியூட்டினார்.
அந்த கனவு எங்கள் மனதில் விதையாக விதைக்கப்பட்டு, வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. எதிர்காலத்தில் ஆலவி ருட்சமாக உயரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கலாம் புதைக்கபடவில்லை, விதைக்கப்பட்டுள்ளார்". இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.