குடிதண்ணீரில் “குட்டி மீன்கள்” – அதிர்ச்சியில் பழனி மக்கள்!
பழனி: பழனியில் குடிநீரில் திடீரென்று மீன்கள் வந்ததால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
பழனி நகருக்கு கொடைக்கானல் சாலையில் உள்ள நீர்தேக்கத்தில் இருந்தும், பாலசமுத்திரத்தில் உள்ள பாலாறு அணையில் இருந்தும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
போதிய மழை இல்லாததால் இந்த 2 அணைகளிலும் தற்போது தண்ணீர் குறைவாகவே உள்ளது.
கலங்கி வரும் குடிநீர்:
இதனால் நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் பெரும்பாலும் கலங்கலாகவே வருகிறது.
6 நாட்களுக்கு ஒரு முறை:
தற்போது நகருக்கு 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரும் பல இடங்களில் பொதுமக்களுக்கு போதிய அளவு கிடைப்பதில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர்.
குடிநீரில் மீன்கள்:
நேற்று மாலை அடிவாரம் திலகர் வீதியில் வினியோகம் செய்யப்பட்ட குடிதண்ணீரில் சிறிய அளவிலான கெண்டை மீன்கள் கலந்து வந்தன. முதலில் இந்த தண்ணீரை பார்க்காமல் குடித்த மக்களுக்கு குமட்டல் வந்தது.
நீர்மட்டம் குறைவு:
தண்ணீர் பிடித்து தெளிந்த பிறகு பார்த்தபோதுதான் நீரில் மீன்குஞ்சுகள் மிதந்ததை பொதுமக்கள் கவனித்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் அணைகளில் தற்போது நீர்மட்டம் வேகமாக குறைந்துவிட்டது.
சுத்திகரிப்பு நிலையம்:
இதனால் சிறிய அளவிலான மீன்கள் வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பாலாறுஅணையில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் சரிவர செயல்படவில்லை. அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி இதனை சரிசெய்ய உத்தரவிட்டுள்ளோம்.
நோய் தொற்று பாதுகாப்பு:
பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வகையில் குடிநீரில் மருந்துகள் கலக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்பிரச்சினை சரிசெய்யப்படும் என்று தெரிவித்தனர்.
அதிர்ச்சியில் மக்கள்:
பெரும்பாலான தெருக்களில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் இதுபோல மீன்குஞ்சுகள் கலந்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.