விதிமீறல் கட்டடங்களால் சொந்த வீடுகளிலிருந்து அகதிகளாக வெளியேறும் தி.நகர்வாசிகள்!
விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களால் சொந்த வீடுகளிலிருந்து அகதிபோல் அப்பகுதிவாசிகள் வெளியேறி வருகின்றனர்.
சென்னை: விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்ததால் சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதிவாசிகள் சொந்த வீடுகளை விட்டு அகதிகள் போல் வெளியேறி வருகின்றனர்.
104 மீட்டர் உயரம் கொண்ட 7 மாடிகள் அடங்கிய அழகிய கடைதான் தி சென்னை சில்க்ஸ். இந்த கடையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு ஊழியர்கள் விரைநது சென்று கடைக்குள் சிக்கியிருந்த ஊழியர்கள் 15 பேரை பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில் கட்டடமானது சிறிது சிறிதாக சரிந்து விழுந்து கொண்டே வருகிறது. தீ தொடர்ந்து எரிந்து வருவதால் தி.நகர் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. எதிரே வரும் வாகனங்கள், ஆட்கள் தெரியாமல் இருந்தது.

நடேசன் பார்க்கில் பொழுதை கழிப்பு
துணிக்கடை நேற்று தீப்பிடித்ததால் அப்பகுதிவாசிகளுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு அருகில் உள்ள நடேசன் பூங்காவில் பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில் மின்சாரம், உணவு ஆகிய வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

கட்டடம் இடிப்பு
கட்டடம் முழுவதும் சேதமடைந்துள்ளதால் கட்டடம் தானாக இடிவதற்குள் அதிகாரிகளாகவே இடிக்க ஆலோசனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் வசித்து வருவோரை வீட்டை விட்டு காலி செய்யுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இடைவெளி இல்லை
திநகரில் அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வழக்கமாக பெரிய அளவிலான கட்டடங்கள் கட்டப்படும் போது அதன் மொத்த நிலப்பரப்பில் 10 சதவீதம் திறந்தவெளிப் பரப்பாக ஒதுக்கப்பட வேண்டும் என்பது விதி.

முறைகேடு நடந்துள்ளது
பல அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்படும் போது சாலையிலிருந்து குறைந்தபட்சம் 6 மீட்டர் தொலைவுக்கு தான் கட்டடம் கட்டப்பட வேண்டும். அத்துடன், பக்கவாட்டில் தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியாக குறைந்தபட்சம் 20 அடி அகலத்திற்கு பாதைக்காக நிலம் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த விதிமுறைகள் ஏதும் கடைப்பிடிக்கப்படவில்லை. இதனால் கடை உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதோடு சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் சொந்த வீடுகளை விட்டு அகதிகள் போல் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஊழியர்கள் ஒத்துழைப்பு
கடந்த 2011-இல் சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்க சிஎம்டிஏ உத்தரவிட்டும் கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடி தடை வாங்கினர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படி எனில், கடை உரிமையாளர்கள் தடை வாங்கிவிட்டால் அப்படியே விட்டுவிடுவதா. மேல்முறையீடு செய்ய வேண்டாமா. இந்த தீவிபத்து அதிகாலையில் நடந்ததால் சரி, இதே பீக் ஹவர்ஸில் ஏற்பட்டிருந்தால் எத்தனை உயிர் பலி நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கவே பயங்கரமாக உள்ளது.

அதிகாரிகள் மீது நடவடிக்கை
திநகரில் இதுபோன்று ஏராளமான கடைகளில் முறையாக ஆய்வு செய்யாமல், அவை விதிகளை மீறியிருந்தாலும் அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில அதிகாரிகள் லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற அனுமதி கொடுத்ததால் அப்பாவி மக்கள் தற்போது அகதிகள் போல் சுற்றி திரிந்து வருகின்றனர்.

சேதாரம் பெற்று தரவேண்டும்
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அருகே உள்ள கடைகள் மூடுவதற்கு போலீஸார் அறிவுறுத்தினர். இதனால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி கட்டடப்பட்ட ஒரு கட்டடத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நஷ்ட ஈட்டை கடை உரிமையாளர்களிடம் இருந்து அதிகாரிகள் பெற்று தருவார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications