நெல்லையில் வீடுகளுக்கு அருகில் டாஸ்மாக் கடை- இழுத்து மூட வி.சி.க. வலியுறுத்தல்!
நெல்லை அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் டாஸ்மாக் கடையை மாற்ற கோரி போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
நெல்லை: நெல்லை அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் டாஸ்மாக் கடையை மாற்ற கோரி போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் மற்றும் ஆற்றங்கரை பள்ளி வாசல் இடையே உள்ள பிரதான சாலையில் டாஸ்மாக் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சாலையின் வழியாக உவரி, ஆற்றங்கரை பள்ளிவாசல் போன்ற ஸ்தலங்களுக்கு அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.
பட்டார்குளம், இளையநயினார்குளம், சிதம்பராபுரம், திருவம்பலாபுரம், ஆத்துக்குறிச்சி, உதயத்தூர் பகுதியை சேர்ந்த கிராம மக்களும் பள்ளி மாணவர்களும் தினமும் ராதாபுரம் வந்து செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மாணவர்கள் குடி பழக்கத்திற்கு ஆளாகும் அபாயம் எழுந்துள்ளது.
இந்த சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே திருமண மண்டபம், நடுநிலைப்பள்ளி ஆகியவையும் உள்ளன. அதே போல ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. இந்த டாஸ்மாக் கடையில் மாலை நேரங்களில் ஏராளமானோர் மது வாங்க வருகின்றனர்.
இது பள்ளி முடித்து வீட்டுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கும், திருமண மண்டபத்திற்கு வந்து செல்லும் மக்களுக்கும் இடையூறாக உள்ளது. பார் வசதி இல்லாததால் குடிமகன்கள் தெருவில் அமர்ந்து குடிப்பதால் பெண்களும், மாணவிகள் அச்சத்துடன் அந்த இடத்தை கடந்து வருகின்றனர்.
இந்த காரணத்தினால் ராதாபுரத்தில் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த டாஸ்மாக் கடையை மாற்றவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என ராதாபுரம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் அறிவித்துள்ளார்.