எத்தனை தடவைதான் நாங்க சிரிக்கிறது.. அதிமுகவைப் பார்த்து கேட்கும் மக்கள்!
சென்னை: அதிமுகவின் இரு பிரிவுகளுக்கும் வைக்கப்பட்டுள்ள பெயரைப் பார்த்து மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். இது நாம் கேட்ட கேள்விக்கு வாசகர்கள் அளித்த பதில் மூலமும் தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியானது எடுப்பார் கைப்பிள்ளையாகி விட்டது. இரு பிரிவாக உடைந்து சிதறியுள்ள நிலையில் 3வதாக தீபாவும் திடீரென வந்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.
ஓ.பி.எஸ் தரப்பும், தீபா தரப்பும் யாருடய கட்டுப்பாட்டிலோ உள்ளதாகவும், அவர்களது அஜன்டாவுக்கேற்றபடி செயல்படுவதாகவும் ஒரு பேச்சு உள்ளது. எதிர்த் தரப்பான தினகரன் தரப்பும் கூட சில பல அஜென்டாக்களுடன்தான் வலம் வருவதாக டாக் உள்ளது.
இந்த நிலையில் அதிமுகவின் பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை முடக்கி வைத்து விட்ட தேர்தல் ஆணையம் ஆளுக்கு ஒரு புதுப் பெயரையும், சின்னத்தையும் கொடுத்துள்ளது. இந்தப் பெயர் மக்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அம்மா - அதிமுக புரட்சித் தலைவி அம்மா
சசிகலா குரூப்புக்கு அதிமுக அம்மா என்றும், ஓ.பி.எஸ் குரூப்புக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்றும் பயங்கர வித்தியாசமான பெயரை வைத்துள்ளனர். இந்தப் பெயர் மக்களிடையே என்ன கருத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நமது வாசகர்களிடம் கேட்டிருந்தோம்.
எத்தனை தடவைதான் நாங்க சிரிக்கிறது
இந்தப் பதிலுக்குத்தான் பெருவாரியான ஆதரவு கிடைத்துள்ளது. அதிமுகவைப் பார்த்து எத்தனை தடவைதான் நாங்க சிரிக்கிறது என்பதே மக்களின் பெருவாரியான கருத்தாக உள்ளது. கிட்டத்தட்ட 50.78 சதவீதம் பேர் இந்த பதிலையே தேர்வு செய்துள்ளனர். வாக்குகள் எண்ணிக்கை 15,050.
நல்லாருக்குங்க
இந்தப் பெயரையும் நல்லாருக்கு என்று சொல்ல சிலர் உள்ளனர் என்பது உள்ளபடியே இரு பிரிவினருக்கும் சந்தோஷம் தரக் கூடியதே. அதாவது 3.4 சதவீதம் பேர் நல்லாருக்கு என்று கூறியுள்ளனர்.
சகிக்கலை
சசிகலா என்ற பெயரையே சகிக்கல என்று கூறி மீம்ஸ் போட்டவர்கள் நம்மவர்கள். இந்தப் பெயரையும் சகிக்கலை என்று 11.65 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிமுகவின் அழிவு தொடங்கியது
இரு கூறுகளாக அதிமுக பிரிந்து போனதை தேர்தல் ஆணையம் முறைப்படி கூறியுள்ளதைத் தொடர்ந்து அதிமுகவின் அழிவு தொடங்கி விட்டதாக 34.17 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது கிடைத்த வாக்குகள் 10,128.