தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு- கரையோர மக்கள் முகாம்களில் தஞ்சம்
நெல்லை: நெல்லையில் பாபநாசம், சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனாலா் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு முக்கிய பொருட்களை அப்புறப்படுத்தி வெளியேறினர்.
நெல்லை,தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தொடர்ந்து முன்று மாதமாக பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம், அணையின் நிரம்பி விட்டதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி அப்படியே திறந்து விடப்படுகிறது.
இதுபோல் சேர்வலாறின் அணையின் நீர்மட்டமும் நிரம்பி வி்ட்டது. இதனால் அதன் உபரி நீரும் தொடர்ந்து வெளியேறறப்படடு வருகிறது. இதனால் தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள முண்டத்துறை பாலத்தை மூழ்கடித்து கொண்டு வெள்ளம் ஓடுகிறது. கானா நதி, ராமநதி அணையின் தண்ணீரும் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீரும் தாமிரபரணியில் கலக்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் நீர் தாமிரபரணியில் கலப்பதால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அங்கு கரையோரத்தில் வசித்து வந்த பொது மக்கள் தங்களது உடைமைகள், அத்தியாவசிய பொருட்களுடன் பாதுகாப்பான இடத்தில் ஏற்பாடு செய்துள்ள முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். கருப்பன்துறை தரை பாலத்தில் மேலே தண்ணீர் செல்வதால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மாலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்தது. இதையடுத்து அசவர கால எச்சரிக்கை விடப்பட்டு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். இங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் நிச்சயமாக நெல்லை, தூத்துக்குடியின் பல பகுதிகளில் வெள்ளம் புகும் என பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.