கருப்பு பண ஒழிப்பில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு 71.7% ஆதரவு- ஒன் இந்தியா சர்வே
கருப்பு பண ஒழிப்பில் அரசின் நடவடிக்கைக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ள ஒன் இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
சென்னை: நவம்பர் 8ம் தேதியன்று பிரதமர் மோடி நாட்டு மக்கள் யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது கருப்பு பண புழக்கத்தை ஒழிக்க 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.
எதிர்கட்சியினர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி வருகின்றனர். மத்திய அரசின் நடவடிக்கை பற்றி ஒன் இந்தியா இணையதளம் மாபெரும் கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, குஜராத்தி, ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 31,198 பேர் பங்கேற்றனர்.
இந்த கருத்துக்கணிப்பில் கருப்பு பண ஒழிப்பில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மக்கள் ஆதரவு
கறுப்பு பண ஒழிப்பிற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஆதரிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. நமது ஒன் இந்தியா வாசகர்கள் 71.7% பேர் ஆம் என்று தெரிவித்துள்ளனர். 16,716 பேர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
25.7% ஆதரவு இல்லை
மத்திய அரசின் நடவடிக்கைக்கு 25.7% பேர் ஆதரவு இல்லை என கூறியுள்ளனர். அதாவது 6927 பேர் ஆதரவு இல்லை என்றும், 2.6% பேர் அதாவது 679 பேர் கருத்து கூற விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர்.
பப்ளிக் ஸ்டண்ட்
கறுப்பு பண ஒழிப்பை மத்திய அரசின் பப்ளிக் ஸ்டண்ட் ஆக கருதுகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு 34.3% பேர் அதாவது 9232 பேர் ஆம் என்றும், 65.7% பேர் அதாவது 15090 இல்லை என்றும் கருத்து கூறியுள்ளனர்.
2000 ரூபாய் நோட்டு
கறுப்பு பணத்தை ஒழிக்க 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து விட்டு 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்டுள்ளனர். இது கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை பாழக்குமே என்று கேட்டதற்கு 51.7% பேர் அதாவது 13,417 பேர் ஆம் என்று கூறியுள்ளனர்.
கறுப்பு பண ஒழிப்பு
2000 ரூபாய் நோட்டுக்களால் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை பாழாகாது என்று 48.3% சதவிகிதம் பேர் அதாவது 10,905 பேர் கூறியுள்ளனர். பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்டது மக்களுக்கு தற்போது சிரமத்தை கொடுத்தாலும் எதிர்கால நன்மை கருதி மத்திய அரசின் நடவடிக்கைக்கு பெருவாரியான மக்கள் ஆதரவு அளித்துள்ளது நமது ஒன் இந்தியா நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.