திமுக, அதிமுகவை வீசி எறிந்து கமலுக்கு வாக்களிக்க தமிழகம் தயாராகிவிட்டது: கேஜ்ரிவால் ஆவேசம்
Recommended Video
மதுரை: மதுரையில் இன்று கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார். அந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்று பேசினார்.
கேஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: ஆம் ஆத்மியை சிறு கட்சியாக துவக்கினோம். ஒரே வருடத்தில் பாஜக மற்றும் காங்கிரசை டெல்லி மக்கள் புறம்தள்ளினர்.
70 தொகுதிகளில் 67 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கினர். அதேபோன்ற உற்சாகத்தை தமிழகத்தில் பார்க்கிறேன். கமல்ஹாசனின் ரசிகனாக இருந்து வந்தேன். இதுவரை அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு வாக்களித்து வந்தீர்கள். இப்போது ஊழல் இல்லாத ஒரு கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.
அநீதிக்கு, மதவாதத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர் கமல். நிஜ வாழ்வில் கமல் ஹீரோவாக திகழ்கிறார். டெல்லியில் ஒவ்வொரு துறையிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதேபோல தமிழக மக்கள் இப்போது திமுக மற்றும் அதிமுகவை வீசி எறிய தயாராகிவிட்டனர். கமல்ஹாசனை ஆட்சிக்கு கொண்டுவர மக்கள் தயாராகிவிட்டனர்.
ஊழல் வேண்டுமானால், திமுக மற்றும் அதிமுகவுக்கு வாக்களியுங்கள். பள்ளிகள் வேண்டுமா கமலுக்கு வாக்களியுங்கள். மருத்துவமனை, சாலை, தண்ணீர், மின்சாரம் வேண்டுமா, கமல்ஹாசனுக்கு வாக்களியுங்கள்.
ஆம் ஆத்மிக்கு கொடுத்த ஆதரவை தமிழக மக்கள் கமல்ஹாசனுக்கு அளித்து புது சாதனை படைப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு கூறிய அரவிந்த் கேஜ்ரிவால் வணக்கம் என தமிழில் கூறி உரையை நிறைவு செய்தார்.