துர்நாற்றத்தால் மூச்சு கூட விட முடியவில்லை: மவுலிவாக்கம் மக்கள் அச்சம்
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உடல்களில் இருந்து துர்நாற்றம் வருவதால் தங்களுக்கு நோய் தொற்று ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் அஞ்சுகிறார்கள்.
சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 49 பேர் பலியாகியுள்ளனர். அதில் 20 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளது. கட்டடம் விழுந்த இடத்தில் இன்று 6வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்களில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த துர்நாற்றம் புதன்கிழமை அதிகரித்துள்ளது. இதனால் அந்த இடத்தில் குளோரின் பவுடர், சுண்ணாம்பு பவுடர் ஆகியவை தெளிக்கப்பட்டதுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசியும் போடப்பட்டது.
குளோரின் பவுடர் தெளித்த போதிலும் துர்நாற்றம் அப்பகுதியில் பரவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் கூறுகையில்,
செவ்வாய்க்கிழமை இரவில் இருந்தே துர்நாற்றம் வீசுகிறது. புதன்கிழமை இது அதிகரித்துவிட்டது. இந்த துர்நாற்றத்தால் மூச்சு கூட விட முடியவில்லை. இதனால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம். அதனால் சம்பவ இடத்திற்கு அருகில் வசித்து வருபவர்களுக்கும் சுகாதாரத் துறை தடுப்பூசி போட வேண்டும் என்றார்.