எப்படியும் உள்ளே போடுவாங்க... இருப்பவர்களை தக்க வைக்க 'சிஎம்' நாற்காலி பிட்டை போட்ட தினகரன்
6 அமைச்சர்களை நீக்கிவிட்டு எங்களுடன் இணைந்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன் என தினகரன் கூறியுள்ளார். கைது பயத்திலேயே தான் முதல்வராக விரும்பவில்லையாம்.
Recommended Video
தஞ்சாவூர்: மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தில் பேசிய டிடிவி தினகரன் தனது ஆதரவாளர் ஒருவரை முதல்வராக்குவேன் என்று கூறி 18 பேரையும் முதல்வர் கனவில் மிதக்க விட்டுள்ளார்.
கதிராமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தேர்தல் நடந்தால் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். எதிரணியில் உள்ள 6 பேரை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வந்தாலும் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்புள்ளது.
நான் முதல்வராக வேண்டும் என்ற ஆசை இல்லை. என்னோடு துணையாக நின்ற 18 தியாகிகளில் ஒருவரை முதல்வராக்குவேன். மீண்டும் தேர்தல் வர வேண்டாம் என நினைக்கும் எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் மனம் திருந்தி வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் விசாரணை நிறைவுபெற்ற நிலையில், விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பே வரும் எனத் தினகரன் கூறிவரும் நிலையில், 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன் என அவர் பேசியுள்ளார்.
அணிமாறுபவர்களை தடுக்க அறிவிப்பு
டிடிவி தினகரன் அணியில் உள்ள 18 எம்எல்ஏக்களில் 10 பேர் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி பக்கம் சாய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கான அண்டர்கிரவுண்ட் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாகவே 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன் என்று பேசி வருகிறார் டிடிவி தினகரன்.
18பேரில் யார் முதல்வர்
அடுத்த முதல்வர் நான்தான் என்று ஜெயலலிதா இருந்த போதே கனவில் மிதந்த பலரும் இன்றைக்கு தினகரன் பக்கம் இருக்கிறார். அதிர்ஷ்ட தேவதை நம் பக்கம் திரும்பலாம் என்ற ஆசையில் பலரும் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு இப்போதே ஜோதிடர்களை நாடத் தொடங்கி விட்டார்களாம்.
அமுக்க நினைக்கும் அமலாக்கத்துறை
தினகரனின் புரட்சிப்பயணத்தை தடுக்கவும், அவரது வேகத்தை குறைக்கவும் அமலாக்கத்துறையை வைத்து அவரை அமுக்க திட்டங்கள் நடைபெற்று வருகிறதாம். திகாரில் இருந்து தினகரன் ஜாமீனில் வெளியே வந்து 9 மாதங்கள் முடிவடைந்து விட்டன. தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க ஹவாலா பாணியில் பணம் கொண்டுவரப்பட்ட வழக்கில் தினகரனை கைது செய்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினகரன் சொல்வது நடக்குமா?
நான் கூறும் 6 அமைச்சர்களை நீக்கிவிட்டு எங்களுடன் இணைந்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன் என்று தினகரன் கூறுவதை கேட்க யாரும் தயாராக இல்லை. மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தில் தினகரன் எதிர்பார்த்த அளவிற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சிவி சண்முகம் பதில்
இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் சி.வி.சண்முகம், டிடிவி தினகரன் குழப்பத்தின் உச்சியில் இருப்பதால் அதிமுகவுக்கு உரிமை கோருகிறார். அதிமுகவில் தினகரன் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. கட்சியின் சின்னம், பெயரை கோர டிடிவி தினகரனுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.