பேரறிவாளன் தந்தை குயில்தாசன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
பேரறிவாளன் தந்தை குயில்தாசன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தந்தை குயில்தாசன்,
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை
அற்புதம்மாள் உடனிருந்து கவனித்துவருகிறார்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் தண்டுவடம், நரம்பியல், கால் செயலிழப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், தந்தையின் உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், இதனால் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தார்.
அவரது கோரிக்கையைப் பரிசீலனை செய்த தமிழக அரசு, நிபந்தனையுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் பேரறிவாளனை ஒரு மாத பரோலில் விடுவித்தது. இதையடுத்து வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டார் பேரறிவாளன்.
இதனிடையே, தந்தை குயில்தாசனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், பரோலை நீட்டிக்கக்கோரி தமிழக அரசுக்கு பேரறிவாளன் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கியது.
இந்த நிலையில், உடல்நிலைக் குறைவால் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிசிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருவாரம் தங்கி சிகிச்சைபெற்று வந்தார் குயில்தாசன்.
இந்த நிலையில் 2 மாத காலம் பரோல் முடிந்து கடந்த 24ஆம் தேதி வேலூர் சிறைக்கு திரும்பினார் பேரறிவாளன். பேரறிவாளன் பரோல் முடிந்து சிறை சென்றதால், பாதி சிகிச்சையில் வீடு திரும்பினார் குயில்தாசன்.
இந்த நிலையில் குயில்தாசன் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை, அற்புதம்மாள் உடனிருந்து கவனித்துவருகிறார்.












Click it and Unblock the Notifications