ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமையாக்க கோரிய மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி!
ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துகளை, அரசுடமை யாக்க வேண்டியதுஅவசியம் என பொது நல மனு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மதுரை: மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்க கோரிக்கைவிடுத்து, மதுரை ஹைகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மதுரை பொது நல வழக்குகள் மைய நிர்வாக அறங்காவலர், கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: மறைந்த ஜெயலலிதா, ஏராளமான சினிமாவில் நடித்து பல கோடி ரூபாய் சம்பாதித்தார்.
1989ல், அ.தி.மு.க., பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது, சட்டசபை தேர்தலில், முதன்முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
சொத்து விவரம்
ஜெயலலிதா நான்கு முறை முதல்வராக பதவி வகித்தார். 2016, மே மாதம் ,நடந்த சட்டசபை தேர்தலில், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டி யிட்டார். அப்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், வங்கியில், டெபாசிட் என, 10.63 கோடி ரூபாய், பத்திர முதலீடு என27.44 கோடி, நகைகள் மதிப்பு என, 41.63 கோடி, நில மதிப்பு என, 72 கோடி ரூபாய் மற்றும் வாகன விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.
வாரிசு யார்
அவர், கடந்த டிசம்பர் 5ம் தேதி இறந்தார். தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் அவருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. அந்த சொத்துகளை தனக்கு பின் யார் நிர்வகிப்பார்கள் என்பது தொடர்பாக அவர் எதுவும் குறிப்பிடவில்லை. அவருக்கு நேரடி வாரிசும் இல்லை.
மக்களுக்காகவே நான்
மக்களால் நான்; மக்களுக்காகவே நான்' என, ஜெயலலிதா அடிக்கடி குறிப்பிடுவார். அவரது அசையும், அசையா சொத்துகளை, அரசுடமை யாக்க வேண்டியது அவசியம். இதன்மூலம் வரும் வருவாயை, ஏழைகளின் நலன்களுக் காக பயன்படுத்தலாம்.
நீதிபதி குழு
எனவே ஓய்வு பெற்ற ஹைகோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஜெயலலிதாவின் சொத்துகளை கண்டறிந்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அந்த அறிக்கையின்படி அவருடைய சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும். பின்னர் அந்த சொத்துகளை ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு நிர்வகித்து, சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஏழைகளுக்கு செலவிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, இது விசாரணைக்கு ஏற்றது இல்லை என கூறி மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது.