ஊழலில் திமுக- அதிமுக போட்டி... மின் வாரியத்துக்கு ரூ.73,000 கோடி இழப்பு- மத்திய அமைச்சர்
சென்னை: தமிழகம் கடந்த 30 ஆண்டுகளாகவே ஊழலில் சிக்கி தவிக்கிறது என்றும், ஊழல் செய்வதில் திமுக - அதிமுக இடையே போட்டி நடைபெறுவதாகவும் மத்திய மின்துறை அமைச்சர் அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக அரசால், தமிழக மின் வாரியத்திற்கு, 73 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பியுஷ் கோயல் புகார் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த திங்கட்கிழமை நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆளும் அதிமுக சாதனைகள், தேர்தல் பிரச்சாரத்தை சொல்லி வாக்கு கேட்டு வருகிறது. திமுக, மக்கள் நலக்கூட்டணி, பாஜக என பலமுனைகளில் இருந்து ஆளுங்கட்சியை விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தனி அணியாக போட்டியிடுகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பியூஷ் கோயல், தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

ஊழல் செய்வதில் போட்டி
கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க-தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் ஊழலில் யார் பெரியவர்கள் என்று போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மோடி அரசு ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருகிறது.

தடையில்லாத மின்சாரம்
கடந்த 66 ஆண்டுகளாக வடமாநிலங்களில் இருந்து தமிழகம் உள்பட தென்மாநிலங்களுக்கு வெறும் 3 ஆயிரத்து 450 மெகாவாட் மின்சாரம் தான் கொண்டு வரமுடிந்தது. ஆனால் மோடி அரசு பதவியேற்று, 2 ஆண்டுகளில் கூடுதலாக 2 ஆயிரத்து 450 மெகாவாட் மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.

நிலக்கரி
தமிழகத்தில் கோடை காலமாக இருந்தாலும் தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு மோடியை தவிர வேறு யாரும் காரணம் அல்ல.
கடந்த காலத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆனால் இப்போது போதும், போதும் என்று மாநில அரசுகள் சொல்லும் அளவிற்கு நிலக்கரியை வழங்கி வருகிறோம்.

உதய் மின் திட்டம்
உதய் மின்திட்டத்தை செயல்படுத்தினால், மின்சார வாரியம் ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி நஷ்டத்தோடு இயங்காது என்று கூறினோம். ஆனால் காலாண்டுக்கு ஒரு முறை மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த சொல்கிறது என்று இங்கு பிரசாரம் செய்கிறார்கள். இது எந்த விதமான அரசியல் என்று எனக்கு தெரியவில்லை.

தமிழக அரசு பொய் பிரச்சாரம்
உதய் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தினால் வரும் 3 ஆண்டுகளில் தமிழக மின்சார வாரியத்திற்கு ரூ.22 ஆயிரத்து 400 கோடி லாபம் கிடைக்கும். ஆனால் அதனை செயல்படுத்த தமிழக அரசு மறுக்கிறது. நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில் மின் இழப்பு அதிகரித்துள்ளது.

இலவச மின்சாரம்
இரு திராவிட கட்சிகளின் ஊழலே, தமிழக மின்பிரச்னைக்கு முக்கிய காரணம். 'இலவச மின்சாரம்' என, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சம் செயல்பாட்டுக்கு வந்தால், தமிழகத்தில் மின்வெட்டு அதிகரிக்கும். மின் துறையில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக, விசாரணை நடத்த, மத்திய அரசால் முடியாது. ஏனெனில், மின் துறை, மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

ரூ. 73,159 கோடி இழப்பு
கடந்த, ஏழு ஆண்டுகளில் தமிழக மின் துறையில், 73 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த, ஏழு ஆண்டுகளில் தமிழக மின் துறைக்கு, 73 ஆயிரத்து, 159 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்து.இவ்வாறு மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.

விணாக்கிவிடாதீர்கள்
இலவச வாக்குறுதிகளையும், பொய்யான வாக்குறுதிகளையும் சிலர் சொல்லி இருக்கிறார்கள். இதனை தயவு செய்து யாரும் நம்பி விடாதீர்கள். எச்சரிக்கையோடு இருங்கள். நமக்கு தேவை நேர்மையான அரசு தான். இலவசங்களை நம்பினால் வாழ்க்கை இருண்டு விடும் என்று கூறினார்.

தொடர்பு எல்லைக்கு அப்பால்
நாம் தன்மானத்தோடு வாழ வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் தொடர்பு கொள்ள முடியாது. அவர்கள் மக்களுடன் தொடர்பில்லாமல் இருக்கிறார்கள் என்றும் பியூஷ் கோயல் கூறினார்.












Click it and Unblock the Notifications