சிறையில் என் கணவரை 30 பேர் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர்.. பியூஷ் மனுஷ் மனைவி கதறல்
சேலம்: சமூக சேவகர் பியூஷ் மனுஷை சிறைக்குள் வைத்து 30 காவலர்கள் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர் என்று அவரது மனைவி மோனிகா குமுறலுடன் கூறியுள்ளார்.
ஏரிகளின் காவலர் என்று செல்லாக அழைக்கப்படுபவர் சேலத்தைச் சேர்ந்த பியூஷ் மனுஷ். இவரது பூர்வீகம் ராஜஸ்தான். ஆனால் பல காலத்திற்கு முன்பே இவரது குடும்பம் சேலத்தில் செட்டிலாகி விட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலரான மனுஷ் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு எதிராகவும், வன அழிப்புக்கு எதிராகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இவர் தொடங்கிய மக்கள் குழு சேலத்தில் மிகப் பிரபலமாகும். 2010ம் ஆண்டு இது தொடங்கப்பட்டது. அழிவுக்குப் போய் விட்ட சேலம் மூக்கனேரியை தூர்வாரி, அதை சுத்தம் செய்து அந்த ஏரியை அற்புதமான தீவாக மாற்றி இன்று சேலம் மக்கள் நிம்மதியாக பொழுதைக் கழிக்கும் தீவுப் பிரதேசமாக மாற்றிய பெருமை மனுஷ் குழுவுக்கே உரிததானது. இங்கு மட்டும் 10,000 மரங்களை இவர்கள் நட்டுள்ளனர். மேலும் பல ஏரிகளையும் மனுஷ் குழுவினர் புதுப்பித்து உயிர் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில்தான் தற்போது மனுஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரது நிலை குறித்து மனுஷின் மனைவி மோனிகா விகடனுக்கு அளித்துள்ள பேட்டி...
ரயில்வே பால விவகாரம்
சேலம் முள்ளுவாடி கேட்டில் ரயில்வே பாலம் கட்டுவதாகச் சொல்லி கடந்த 7ம் தேதி இரவு குழிகள் தோண்டி இருக்கிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுவதாக மக்கள் குழுவுக்குத் தகவல் வந்தது. என் கணவர் பியூஷ், கார்த்திக், முத்து ஆகியோர் அங்கு சென்று அங்கிருந்த காவல் துறையினரிடம், இந்த இடத்தில் பாலம் கட்டும் முன்பு மாற்றுப் பாதையை உருவாக்கிக் கொடுங்கள். பாலம் கட்டும் இந்த இடத்தில் 17 குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களிடம் இருந்து நிலத்தைக் கையகப்படுத்திய பிறகு, வேலைகளை ஆரம்பித்தால் உடனே முடித்து விடலாம்.
கைது செய்த போலீஸ்
அவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கிவிட்டால் பணிகள் முடங்கிவிடும். பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினர். இதனால் போலீஸார் கோபம் அடைந்து, பணிகளில் குறுக்கிட்டு ஊழியர்களை வேலை செய்யவிடாமல் தடுத்தல், அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு உத்தரவை மதிக்காமல் நடத்தல், கொலை செய்வதாக மிரட்டல் என 4 பிரிவுகளின் கீழ் 3 பேரையும் கைது செய்திருக்கின்றனர்."
30 காவலர்கள் அடித்தனர்
இதையடுத்து வழக்கறிஞரை வைத்து 15-ம் தேதி சிறைக்குச் சென்று விசாரித்தபோது 30 சிறைக்காவலர்கள் என் கணவரை ஒரு மணி நேரம் அடித்ததாகவும், சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை செய்வதாகவும் தெரியவந்திருக்கிறது. கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் 14-ம் தேதி ஜாமீன் கேட்டிருந்தோம். கார்த்தி, முத்து ஆகிய இருவருக்கும் ஜாமீன் கொடுப்பதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனக் காவல் துறை கூறியதால் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது.
பியூஸுக்கு மட்டும் ஜாமீன் மறுப்பு
ஆனால் பியூஷ் மீது, சேலம் மாநகராட்சி மரங்களை வெட்டியதைத் தடுத்த வழக்கு, ஆனந்தா மேம்பாலம் திறக்கப்படாமல் கிடப்பில் இருந்ததை எதிர்த்து நோட்டீஸ் கொடுத்ததற்கு வழக்கு, ஏரி ஆக்கிரமிப்பை எதிர்த்த வழக்கு எனப் பல வழக்குகள் உள்ளன. அதற்கெல்லாம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அதனால் அவருக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என்று நீதிபதியிடம் கூறியதால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
ஆயிரம் பியூஷ்கள் வருவார்கள்
மக்கள் சார்ந்த பிரச்னைகள் என்றால் பியூஷ் முன்னாடி நிற்பார். யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பார். இளம்பெண் வினுப்ரியா தற்கொலை விவகாரத்தில் போராட்டம் செய்ததோடு ஃபேஸ்புக்கிலும் அவர் பதிவுகள் போட்டதால் சேலம் காவல் துறையினர் என் கணவர் மீது கோபத்தைக் காட்டி இருக்கிறார்கள். பியூஷின் அடையாளமே போராட்டம்தான். அவர் தொடர்ந்து அநீதிக்கு எதிராகப் போராடிக் கொண்டுதான் இருப்பார். ஒரு பியூஸின் போராட்டத்தை காவல் துறை அடக்க நினைத்தால் ஆயிரம் ஆயிரம் பியூஷ்கள் போராட வருவார்கள்.
கதறி அழுதார்
என் கணவர் பியூஷை சிறையில் போய்ப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் தேம்பித் தேம்பி அழுதார். திருமணம் ஆகி 16 ஆண்டுகளில் அவர் அழுததை நான் பார்த்ததே இல்லை. போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றிருக்கிறார். அவர், சிறையைக் கண்டு அஞ்சுபவரும் கிடையாது. இந்த முறை சிறை அதிகாரிகள் கடுமையாக டார்ச்சர் செய்திருக்கிறார்கள். என்னைச் சிறை அதிகாரிகள் பயங்கரமாகத் துன்புறுத்துகிறார்கள். வெற்றுப் பேப்பரில் கையெழுத்துப் போடச் சொல்கிறார்கள். கமிஷனரிடமும், எஸ்.பி-யிடமும் மன்னிப்பு கேட்கச் சொல்கிறார்கள் என்று அழுது கொண்டே சொன்னார். பிறகு, நொண்டியபடி திரும்பிச் சென்றார் என்று கூறி கதறி அழுதுள்ளார் மோனிகா.