ஜெ.மரணத்தில் மர்மம் உள்ளதா?... என்ன கூறப் போகிறது ஹைகோர்ட்?
ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடக் கோரும் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சென்னை: ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரும் மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமீபத்தில் கடலூரைச் சேர்த்த வழக்கறிஞர் ஏ.கே.வேலன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், "ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்களில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து எந்த விவரமும் வெளியிடவில்லை. ஆளுநர் கூட அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அரசின் முதன்மை பொறுப்பில் உள்ளவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடவேண்டும்.
அப்பல்லோ மருத்துவமனை அனைத்தையும் மூடி மறைத்து விட்டது. எனவே இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்" என்ற கோரிக்கையை வைத்திருந்தார்.
இந்த மனு எழும்பூர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, சந்தேக மரண வழக்காக பதிவு செய்ய சென்னை காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.கே.வேலன் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.விமலா முன் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே இதேபோல வேறொரு நபர் தொடர்ந்த மற்றொரு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி இன்று அந்த வழக்கானது விசாரணைக்கு வருகிறது. இதன் முடிவில் ஜெ.மரணம் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்படுமா? என்பது தெரியவரும்.