106 சிறைக்கைதிகள் உள்பட 8.39 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ்டூ தேர்வு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று துவங்கியது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியது. இதனையடுத்து மாணவர்கள் ஆர்வமாக தேர்வை எழுதினர்.
இத்தேர்வு ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மொத்தம் 6 ஆயிரத்து 550 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
தனித்தேர்வர்களும்:
பள்ளி மாணவர்களை தவிர 42,347 தனித்தேர்வர்கள் என மொத்தம் இந்தாண்டு 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
மொத்த மையங்கள்:
புதுச்சேரியில் 35 தேர்வு மையங்களில், 135 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 337 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் தேர்வுக்காக மொத்தம் 2 ஆயிரத்து 421 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு எழுதும் சிறைக்கைதிகள்:
தமிழ் வழியில் படித்த 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர். இதுதவிர 106 சிறைக்கைதிகள் பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகிறார்கள்.
4 ஆயிரம் பறக்கும் படைகள்:
பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிப்பதை கண்காணிப்பதற்கு தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் பறக்கும் படைகள் மற்றும் நிலையான படை நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிட் அடித்தால் தண்டனை:
பிட் அடித்தல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.