ஜெ.வின் கனவுத் திட்டம் "அம்மா ஸ்கூட்டி".. தொடங்கி வைத்தார் மோடி!
தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மோடி வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திலும் கலைவாணர் அரங்கிலும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு சார்பில் பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுக தேர்தல் அறிக்கையை வாசித்த முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கு மானிய விலையில் கியர் இல்லாத ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அறிவித்தார். பல அறிவிப்புகள் பெண்களை கவர்ந்தது. ஜெயலலிதா வெற்றி பெற்று 6வது முறையாக முதல்வரானார்.
தாலிக்கு தங்கம்
தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்த ஜெயலலிதா அதே நாளில் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 5ஆம் தேதி அவர் மரணமடைந்தார்.
மாறிய முதல்வர்
ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் கடந்த ஓராண்டில் முதல்வர் ஓபிஎஸ், ஈபிஎஸ் என மாறினர். அதிமுக பிளவு பட்டது. பின்னர் இணைந்தது. இந்த ஊசலாட்டத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் ஓராண்டு கழித்து மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் தொடங்கப்படும் என்று கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
லட்சக்கணக்கானோர் மனு
கடந்த மாதம் மானிய விலை ஸ்கூட்டரைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதிலிருந்து தகுதியுடைய பெண்களுக்கு ஜெயலலிதாவின் பிறந்தநாளின் போது ஸ்கூட்டர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மோடி வருகை
அதிமுக அரசு சார்பில் 50 சதவீதம் மானியத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார். இதற்கான விழா கலைவாணர் அரங்கில் பிரமாண்டமாக நடக்கிறது.
ஜெ பிறந்தநாள் விழாவில் மோடி
சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர்.
5 பெண்களுக்கு ஸ்கூட்டி
பிரதமர் மோடி இன்று மாலை 3.15 மணிக்கு தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு மாலை சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்று கார் மூலம் கலைவாணர் அரங்கம் வந்து 5 பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். முதலாவதாக மதுமாலா,கணக்காளராக பணி புரியும் ஃபர்சானா, அங்காடி உதவியாளர் தங்க மலர், உதவியாளர் ஜி. கவிதா ஆகியோருக்கு இரு சக்கர வாகனத்தின் சாவி, ஆர்.சி புத்தகத்தை வழங்கினார் மோடி.
பாதுகாப்பு வளையத்தில் சென்னை
விழா முடிந்ததும் கார் மூலம் புறப்பட்டு இரவு 7 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு சென்று இரவு அங்கேயே தங்குகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விமான நிலையம், கலைவாணர் அரங்கில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழா நடைபெறும் சேப்பாக்கம், கலைவாணர் அரங்கம் மற்றும் அதன் வளாகம் முழுவதையும் டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கண்காணித்து வருகிறார்கள்.
உஷார் நிலையில் காவல்துறை
இன்று இரவு சென்னையில் கவர்னர் மாளிகையில் தங்க உள்ள பிரதமர் மோடியை சந்தித்து பேச சிலருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விமான நிலையம் முதல் விழா நடைபெறும் இடம், ஆளுநர் மாளிகை ஆகிய இடங்களில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. ரவுடிகள், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். போலீசார் முழுமையாக உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.