ராமேஸ்வரத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி என கலந்து கட்டிப் பேசிய மோடி!
அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தைத் திறந்துவைத்துப் பேசிய பிரதமர் மோடி தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் பேசினார்.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் பேசி கூட்டத்தை ஆச்சர்யப்படுத்தினார்.
ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இரண்டாம் நினைவு நாளான இன்று, அவரின் மணி மண்டபத்தை திறந்து வைத்தார். அப்போது உரையாற்றிய மோடி மூன்று மொழிகளில் பேசினார். முதலில் மேடையில் இருப்பவர்களை இந்தியில் வரவேற்று வணக்கம் சொன்னார் மோடி.
அடுத்து தமிழில், 'வணக்கம் நண்பர்களே இந்த புண்ணியபூமி ராமேஸ்வரத்துக்கு வந்திருப்பதை பாக்யமாக கருதுகிறேன்' என்று தமிழில் உச்சரிப்புப் பிழையின்றி கூறினார். அவரது தமிழைக் கேட்டு மொத்தக் கூட்டமும் ஆச்சர்யப்பட்டது.
அடுத்து, உரையை ஆங்கிலத்தில் பேசினார். நான்கைந்து நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசிய பிரதமர் மோடி மீண்டும் இந்தியிலேயே பேசத் தொடங்கினார். அவருடைய ஆங்கில மற்றும் இந்தி உரையை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழில் மொழிபெயர்த்துக் கூறினார்.