ராஜபக்சேவுக்கு அழைப்பு.. மவுனம் காக்கும் பா.ம.க.
சென்னை: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவுக்கு ராஜபக்சே அழைக்கப்பட்டிருப்பது ஒரு பா.ம.க. கனத்த மவுனம் காத்து வருகிறது.
டெல்லியில் 26-ந் தேதியன்று மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். இந்த விழாவில் சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் அழைப்பு போயுள்ளது.
மதிமுக எதிர்ப்பு
ராஜபக்சேவும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனால் பாஜகவின் கூட்டணிக் கட்சியான மதிமுக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாமக மவுனம்
அதே நேரத்தில் இதர பாஜக கூட்டணிக் கட்சிகளான தேமுதிக, பாமக இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை உக்கிரமாக ஆதரித்தது.
ஈழ ஆதரவு நிலை
1992ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய போது "புலிகளை ஆதரிப்போம்" என்று பிரகடனம் செய்தது பா.ம.க. அண்மைக்காலம் வரையில் தமிழீழத்தை ஆதரித்துதான் வருகிறது பா.மக.
அமைச்சர் பதவி கிடைக்குமா?
ஆனால் தற்போது மோடி அமைச்சரவையில் பா.ம.க.வுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அமைதியே நல்லது
இந்த நிலையில் மோடி அரசுக்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காப்பதே நல்லது என்று நினைக்கிறது போல பா.ம.க. அதனால்தான் தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்த பின்னரும் கூட பாட்டாளி மக்கள் கட்சி அமைதி காத்து வருகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.